2017-11-14 15:14:00

பாசமுள்ள பார்வையில் – மனிதச் சட்டமா? கடவுள் கட்டளையா?


பாலை நிலத்தில் கடினமான தவ வாழ்வை மேற்கொண்டிருந்த துறவியர், உயிர்ப்புப் பெருவிழாவுக்கு தகுந்த தயாரிப்பாக, புனித வாரம் முழுவதும் உண்ணா நோன்பை கடைபிடிப்பதென, முடிவெடுத்தனர். ஒவ்வொரு துறவியும், அவரவர் அறைக்குள் சென்று, கடும் தவத்திலும், உண்ணா நோன்பிலும் ஈடுபட்டனர்.

புனித வாரத்தின் நடுவில், வேறு ஊரிலிருந்து இரு துறவியர், அத்துறவு மடத்தின் தலைவர், மோசே அவர்களைச் சந்திக்க வந்தனர். அவர்கள், நெடுந்தூரம் பயணம் செய்து வந்ததால், பசியாலும், களைப்பாலும் சோர்ந்திருந்தனர்.  அவர்களது பரிதாப நிலையைக் கண்ட மோசே அவர்கள், அத்துறவியர் உண்பதற்கு, சிறிது உணவை தயார் செய்தார். தங்களுக்கு மட்டும் உணவு வைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்த அவ்விரு துறவியரும், உண்பதற்குத் தயங்கினர். உடனே, மோசே அவர்களும், அவர்களோடு சேர்ந்து, சிறிது உணவை சுவைத்தார்.

மோசே அவர்களின் அறையில் சமையல் நடப்பதை அறிந்து அதிர்ச்சியுற்ற துறுவிகள், மோசே அவர்களின் அறைக்கு முன் கூடினர். அவர்கள் முகத்தில் தெரிந்த கோபத்தையும், கண்டனத்தையும் கண்ட இல்லத்தலைவர் மோசே, அவர்களிடம், "மனிதர்களாகிய நாம் விதித்துக்கொண்ட உண்ணா நோன்பு என்ற கட்டளையைப் பின்பற்ற நான் தவறிவிட்டேன். ஆனால், பசியால் வாடியிருந்த சகோதரர் இருவருக்கு உணவளித்ததன் வழியே, இறைவன் வழங்கிய அன்புக் கட்டளைக்கு நான் கீழ்ப்படிந்தேன்" என்று கூறவே, துறவியர், அமைதியாகக் கலைந்து சென்றனர்.

புனிதத்தில் வளரும் ஒரு முயற்சியாக, துறவியர் விதித்துக்கொண்ட உண்ணாநோன்பு சட்டம் பெரிதா? அல்லது, அயலவரின் தேவை உணர்ந்து, அன்பு காட்ட வேண்டுமென்று, ஆண்டவன் வழங்கிய கட்டளை பெரிதா?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.