2017-11-13 13:30:00

பாசமுள்ள பார்வையில்.. மகனுக்காக அம்மாவின் ஆவேசம்


அந்தச் சிறுவன், சிறுவயதிலே தந்தையை இழந்தான். கைம்பெண்ணான அவனின் ஏழை அம்மாவுக்கு, தன் ஒரே மகனைச் சான்றோன் ஆக்கிவிட வேண்டுமென்ற வெறி.. அதனால், தனக்குத் தெரிந்த நெசவுத் தொழிலில் ஈடுபட்டார். கடினமாக உழைத்து துணிகள் நெய்து, அவற்றை விற்று, தன் மகனைப் படிக்க வைத்தார் அந்தத் தாய். ஆனால் மகனுக்கோ படிப்பில் நாட்டம் இல்லை. பள்ளிக்குச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு, ஊர் சுற்றிக் கொண்டிருந்தான் மகன். ஒருநாள் அவன், இனி பள்ளிக்கூடம் போகக்கூடாது என்று முடிவெடுத்து வீடு திரும்பினான். அந்நேரத்தில், அவனது அம்மா, வியர்வைச் சொட்ட சொட்ட, விலையுயர்ந்த துணி ஒன்றை, கஷ்டப்பட்டு நெய்து கொண்டிருந்தார். அழகான அந்தத் துணியை ஆசையாகப் பார்த்தபடி ஓடிவந்து, அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, "அம்மா... எனக்குப் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை... நானும் உன்னுடன் இருந்து இந்த அழகான துணி நெய்ய உதவுகிறேன்'' என்றான் மகன். அடுத்த நிமிடமே மகனின் கைகளை ஆவேசமாக உதறிவிட்டு, அந்த விலையுயர்ந்த துணியைக் கிழித்து எறிந்தார் தாய். அதோடு அழுகையை அடக்க முடியாமல் கதறி அழுதார் அவர். மகன் பதறிப்போய், "என்னம்மா இப்படிச் செய்துவிட்டாய்... விலையுயர்ந்த துணியாயிற்றே...'' என்றான். பின், தன் அருமை மகனை அணைத்தவாறே அந்தத் தாய் சொன்னார் - "மகனே, விலை மதிப்பில்லாத கல்வியை நீ இழக்கிறாய்... எதிர்காலத்தைப் பாழாக்குகிறாய்! அதைவிடவா இது பெரிய அழிவு!'' என்று. உடனே தனது விரல்களால் அம்மாவின் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, அம்மா, அழாதே, நான் பள்ளிக்கூடம் போகிறேன் என்றான் மகன். தனக்காகவே வாழும் தன் தாயின் கடின உழைப்பைப் பார்த்து, பிற்காலத்தில் தாயின் கனவுகளை நனவாக்கினார் அந்த மகன்.

'இளமையிற் கல்' என்றார் அவ்வையார். “இளமையில் கல்வி சிலையில் எழுத்து”என்றும் சொல்வார்கள். அதாவது, நாம் இளவயதிலிருந்தே கல்வியைக் கற்று வந்தால் அது நம் எதிர்காலத்தின் ஆணிவேராக் திகழும். பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு நல்லதொரு பண்பாட்டை இளவயதிலே ஏற்படுத்திவிட்டால், அது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற மாட்டார்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.