2017-11-04 10:19:00

இறையடியார் ராணி மேரி முத்திப்பேறு பெற்றவராக அறிவிப்பு


நவ.04,2017. இந்தியாவில், 22 ஆண்டுகளுக்கு முன்னர் கொடூரமாய் குத்திக் கொலைசெய்யப்பட்ட இறையடியார் அருள்சகோதரி, ராணி மேரி வட்டாலில் அவர்கள், நவம்பர் 04, இச்சனிக்கிழமை காலையில் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

மத்திய பிரதேச மாநிலத்தின், இன்டோர் நகரிலுள்ள புனித பவுல் பள்ளி வளாகத்தில், புனிதர்நிலை திருப்பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள், தலைமையேற்று திருப்பலி நிறைவேற்றி, இறையடியார் ராணி மேரி அவர்களை, முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார். 

கர்தினால்கள் ஜார்ஜ் அலஞ்சேரி, ஆசுவால்டு கிரேசியஸ், பசிலியோஸ் கிளீமிஸ், திருப்பீடத் தூதர் பேராயர் ஜாம்பத்திஸ்தா திகுவாத்ரோ, இன்டோர் பேராயர் சாக்கோ தொட்டுமரிக்கல் ஆகியோர் நிறைவேற்றிய கூட்டுத் திருப்பலியில், கர்தினால் அலஞ்சேரி அவர்கள், ராணி மேரி அவர்களின் வாழ்க்கை வரலாறை ஆங்கிலத்தில் வாசித்தார்.

உதயநகர் ஆலயத்தில் முத்திப்பேறு பெற்ற ராணி மேரி அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில், பேராயர் ஜாம்பத்திஸ்தா திகுவாத்ரோ அவர்கள் ஞாயிறன்று திருப்பலி நிறைவேற்றினார்.

மேலும், எர்ணாகுளம் புனித மரியா பசிலிக்காவில் நவம்பர் 11ம் தேதி, முத்திப்பேறு பெற்ற ராணி மேரி அவர்களின் நினைவாக திருப்பலி நிறைவேற்றப்படும் என்றும், அவரின் புனிதப் பொருள்கள், புள்ளுவழி ஊர் வழியாக கேரளாவின் பல்வேறு இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் அருள்சகோதரிகள் சபையைச் சேர்ந்த அருள்சகோதரி, இறையடியார் ராணி மேரி அவர்கள், 1995ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி, பேருந்தில் இன்டோர் நகருக்குப் பயணம் செய்துகொண்டிருந்தபோது, 41 வயது மதிக்கத்தக்க சமந்தார் சிங் என்பவரால், 54 முறைகள் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தில், இன்டோர் மறைமாவட்டத்தில், ஏழைகள் மத்தியில், முத்திப்பேறு பெற்ற ராணி மேரி அவர்கள் ஆற்றிவந்த பணிகளால் எரிச்சலடைந்த சில பண்ணையார்களின் தூண்டுதலால், இவர் கொலைசெய்யப்பட்டார்.

இச்சகோதரியின் குடும்பத்தினர், கொலையாளியான சமந்தார் சிங் அவர்களை மன்னித்து, அவரை அடிக்கடி சிறையில் சென்று சந்தித்துப் பேசியதன் பயனாக, தற்போது, சமந்தார் சிங் மனம் மாறி, முத்திப்பேறு பெற்ற ராணி மேரி அவர்களின் பக்தராக மாறியுள்ளார்.

1954ம் ஆண்டு சனவரி 29ம் தேதி கேரளாவின் கொச்சி நகருக்கு அருகிலுள்ள Pulluvazhy என்ற ஊரில் பிறந்த அருள்சகோதரி ராணி மேரி அவர்கள், Kidangoorல், பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில், 1972ம் ஆண்டில் சேர்ந்து, 1974ம் ஆண்டில் முதல் வார்த்தைப்பாடு கொடுத்தார். 1975ம் ஆண்டில் வட இந்தியாவில் Bijnoreல் தனது மறைப்பணியைத் தொடங்கிய இச்சகோதரி, 1992ம் ஆண்டில், Udainagarல் பணியாற்றச் சென்றார்.

1995ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி, தனது 54வது வயதில் கொல்லப்பட்டார், சமூக நீதிக்காகக் குரல்கொடுத்த முத்திப்பேறு பெற்ற ராணி மேரி.

ஆதாரம் : Ind.Sec/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.