2017-10-31 15:22:00

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 44


 

துன்பம் ஏன்? மாசற்றவர்கள் துன்புறுவது ஏன்? என்ற கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியாக, யோபு நூல் அமைந்துள்ளது. இக்கேள்விகளுக்குத் தகுந்த விடை தேடுவதற்கு, கல்வாரி என்ற கல்விக்கூடத்தில் சில வாரங்களுக்குமுன் நாம் அடியெடுத்து வைத்தோம். இயேசு, கல்வாரியில், சிலுவையில், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த வேளையில் கூறிய அற்புதமான சொற்கள், துன்பம் குறித்த நம் எண்ணங்களை தூய்மையாக்கி வருகின்றன.

இன்றைய விவிலியத் தேடலில் "தாகமாயிருக்கிறது" என்ற இயேசுவின் கூற்று, நம் சிந்தனைகளை வழிநடத்துகிறது. கல்வாரியில், இயேசு அடைந்த தாகத்தை முதலில் சிந்திப்போம். நான்கு நற்செய்திகளும் கூறும் கல்வாரி நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்த்தால், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவுக்கு, இருமுறை பானங்கள் கொடுக்கப்பட்டதென நாம் புரிந்துகொள்ளலாம். முதல் முறை, தனக்குக் கொடுக்கப்பட்ட பானத்தை, இயேசு குடிக்க மறுத்தார். இரண்டாம் முறை, அவரே தன் தாகத்தை எடுத்துச் சொன்னார். பாரமான சிலுவையைச் சுமந்து, எருசலேம் வீதிகளில் நடந்து, விழுந்து, எழுந்து வந்த இயேசு, கல்வாரியை அடைந்ததும் அவருக்குப் பானம் ஒன்று கொடுக்கப்பட்டது.

மத்தேயு 27: 33-34

'மண்டையோட்டு இடம்' என்று பொருள்படும் 'கொல்கொதா'வுக்கு வந்தார்கள்; இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவை பார்த்தபின் குடிக்க விரும்பவில்லை.

கசப்பு கலந்த திராட்சை இரசத்தை இயேசு குடிக்க விரும்பவில்லை. காரணம்?... அந்த இரசம், அதிக குடிபோதையைத் தரும். உடல் வலியை மறக்க, அல்லது, மழுங்கடிக்க குடிக்கப்படும் பானம் அது.

இயேசு அடைந்த வேதனையைப் பார்த்து, உரோமைய வீரர்களுக்கே இரக்கம் பிறந்திருக்க வேண்டும். அந்த வலியை அவர் மறக்க உதவும் எண்ணத்துடன், வீரர்கள் அந்த இரசத்தைக் கொடுத்தனர். இயேசு அதை பருக மறுத்தார். தான் ஏற்றுக்கொண்ட துன்பத்தை, இறுதி வரை, முழுமையாக நிறைவேற்றும் தீர்மானத்துடன் இருந்தார், இயேசு. துன்பத்தை, முழுமையாக ஏற்கவிரும்பும் கடவுளைப்பற்றி சிந்திக்க ஓர் அழைப்பு இது.

வேதனையுறும் கடவுள், வலியில் துடிக்கும் கடவுள் என்பவை, நினைத்துப் பார்க்கவே முடியாத எண்ணங்கள். பழைய ஏற்பாட்டில், துன்புறும் ஊழியனைப்பற்றி இறைவாக்கினர் எசாயா நூலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:

எசாயா 53: 4-10

மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்: நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார். நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்... அவரை நொறுக்கவும், நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்.

கடவுளின் ஊழியரை நொறுக்கவும், நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார் என்ற சொற்களைக் கேட்கும்போது, இறைவனின் அனுமதியோடு, சாத்தான் யோபுக்கு அளித்த வேதனைகள், நம் நினைவில் நிழலாடுகின்றன.

இறைவாக்கினர் எசாயாவின் சொற்கள், இயேசுவைப்பற்றி கூறும் முன்னறிவிப்பு என்று கூறுகிறோம். கடவுளின் ஊழியன் துன்பப்படலாம், கடவுளே துன்பப்படலாமா? படலாம். துன்பத்தை, எதிர்மறையான கண்ணோட்டத்துடன், ஒரு சாபமாக, குறையாகப் பார்ப்பதால்தான், கடவுளோடு அதைத் தொடர்புபடுத்திப் பார்க்க சங்கடப்படுகிறோம். ஆனால், துன்பத்தை, நேர்மறையான கண்ணோட்டத்தோடு பார்த்தால், அதன் பயனை உணர்ந்தால், துன்புறும் கடவுளையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

வலியின்றி குழந்தை பெறுவதற்கு மருத்துவ உலகம் பல வழிகளை பரிந்துரைத்தாலும், வலியோடு குழந்தை பெறுவதை, ஆயிரமாயிரம் அன்னையர் இன்றும் தெரிவு செய்கின்றனர் என்பதை அறிவோம். வலியோடு குழந்தை பெறுவதை தெரிவுசெய்யும் தாயைக் கேட்டால், அந்த துன்பத்திற்கு அர்த்தம் உண்டு என்று சொல்வார்.

நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் எதையாவது வெற்றிகரமாக முடிக்கும்போது, அந்த வெற்றிக்குப் பின்புலத்தில் நாம் மேற்கொண்ட துன்பங்கள் அர்த்தமுள்ளவை என்பது புரியும். முயற்சி, துன்பம் இவை ஏதுமின்றி வரும் வெற்றி, இலவசமாகக் கிடைத்த, அல்லது இலாட்டரியில் விழுந்த பரிசுத்தொகை போல இருக்கும். அவ்வாறு நம்மை வந்தடையும் கொடைகளின் உண்மையான மதிப்பை நாம் உணரமுடியாமல் போகலாம்.

 

பல நேரங்களில், வாழ்வில் எவ்வளவு துன்பப்பட்டாலும், வெற்றிகள் வராது. துன்பம் ஒன்றையே மீண்டும் மீண்டும் சந்திக்க நேரும். அந்தத் துன்பங்களைப் புரிந்துகொள்ள, ‘துன்புறும் கடவுள்’ என்ற எண்ணம் நமக்கு உதவியாக இருக்கும். துன்புறும் கடவுள் ஒருவர் இருப்பதாலேயே, நம் துன்பங்களுக்கு அர்த்தம் தேடிக்கொள்ள முடிகிறது. இல்லையெனில், துன்பத்தில் நொறுங்கி, உருக்குலைந்து, நம்பிக்கை இழந்து அலைந்து கொண்டிருப்போம். நம்மை அந்நிலைக்கு உள்ளாக்கிய உறவுகளை, இறைவனை சபித்தவண்ணம் வாழ்வைக் கழிப்போம்.

இதையே, யோபு நூலின் துவக்கத்தில், யோபின் மனைவி அறிவுரையாக வழங்கினார். தன் உடைமைகளையும், அன்புக் குழந்தைகளையும் இழந்து, உடல் நோயால் துன்புற்று, சாம்பலில் அமர்ந்திருந்த யோபிடம், "இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிறீர்! கடவுளைப் பழித்து மடிவதுதானே?" (யோபு 2:9) என்று யோபின் மனைவி கூறினார். "இவை அனைத்திலும் யோபு தன் வாயால் பாவம் செய்யவில்லை" (யோபு 2:10) என்று நாம் வாசிக்கிறோம்.

வலியை மறக்க கொடுக்கப்பட்ட பழ இரசத்தை மறுத்த இயேசுவின் உறுதி, துன்புறும் பல கோடி மக்களுக்கு உதவியாக இருந்துள்ளது என்று பெருமைப்படும் அதே நேரம், வலியை மறக்க, உழைக்கும் வர்க்கத்தினர் மேற்கொள்ளும் ஆபத்தான முயற்சிகளை எண்ணி, கவலையும் பட வேண்டியிருக்கிறது...

நாள் முழுவதும் உடலை வருத்தி, கசக்கிப் பிழியும் வேலைகளை மேற்கொள்ளும் கோடிக்கணக்கான ஏழைகளில் பலர், மாலையானதும், கையில் அன்றையக் கூலி கிடைத்ததும், தங்கள் உடல் வலிகளை மறக்க, தேடிச்செல்வது, சாராயம். இந்தியாவின் பெருநகரங்களில் பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம் செய்பவர்களைப் பார்த்திருக்கிறோம். அவர்கள் அந்தப் பணியில் இறங்கும் முன் சாராயம் குடிப்பதையும் பார்த்திருக்கிறோம். தாங்கள் இறங்கிப் பணிசெய்யும் அந்தக் கொடுமையானச் சூழலுக்கு மரத்துப் போகும்படி அவர்கள் அதைக் குடிக்க வேண்டியுள்ளது.

பணிச்சூழல் மரத்துப் போவதற்கும், உடல் வலி தீர்வதற்கும், ஏழைகள் பருகும் சாராயத்தின் விளைவாக அவர்கள் உடல் நலத்தில் ஏற்படும் விபரீதங்கள், குடும்பங்களில் ஏற்படும் வேதனைகள், ஏராளம், ஏராளம். மேலோட்டமாகப் பார்க்கும்போது, அவர்களது சாராயத் தாகம் கண்டனத்திற்குரியதாய் நமக்குத் தோன்றும். கண்டனத்திற்கு பதில், கருணை நிறைந்த புரிந்து கொள்ளுதல் நமக்குத் தேவை.

கண்டனத்திற்குரியவர்கள் இவர்கள் அல்ல. இந்த ஏழைகளின் உடல் வேதனையை மூலதனமாக்கி, இலாபம் ஈட்டும் போதைப்பொருள் வர்த்தகர்களும் அவர்களுக்குத் துணையாக இருக்கும் அதிகாரிகளும், மந்திரிகளும் கண்டனத்திற்குரியவர்கள். அதே போல், இந்த ஏழைகளின் குடும்ப வேதனைகளை மூலதனமாக்கி, வட்டிக்குக் கடன் கொடுத்து, அவர்களை உயிரோடு விழுங்கும் சுறாமீன்களும் கண்டனத்திற்குரியவர்கள்.

அண்மையில், நெல்லை மாவட்டம், தென்காசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், கந்துவட்டிக்காரர்களின் கொடுமைகளைத் தாங்கமுடியாமல், தன் மனைவி, மற்றும் குழந்தைகளுடன், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குமுன் தீக்குளித்த கொடுமையை நாம் மறந்திருக்க வாய்ப்பில்லை.

தன் உடல் வலிகளை மறக்க அளிக்கப்பட்ட மதுவை குடிக்க மறுத்த இயேசு, குடிப் பழக்கத்தின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் ஏழைகளின் வாழ்விலும் குறுக்கிட்டு, உடல் வேதனைகளைச் சமாளிப்பதற்குத் தேவையான மன வலிமையை, வேதனைகளிலிருந்து மீள்வதற்கான நல் வழிகளை, அவர்களுக்குக்  காட்டவேண்டும் என செபிப்போம்.

கல்வாரியில், இரண்டாவது முறையாக, இயேசுவின் தாகம் தீர்க்கப்பட்ட நிகழ்வு, யோவான் நற்செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:

யோவான் 19: 28-29

இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, “தாகமாய் இருக்கிறது” என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார். அங்கே ஒரு பாத்திரம் நிறைய, புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து, ஈசோப்புத் தண்டில் பொருத்தி, அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள்.

முதல் முறை கொடுக்கப்பட்ட மதுவை மறுத்தார் இயேசு. இம்முறை, “தாகமாய் இருக்கிறது” என்று விண்ணப்பித்தார். இறை மகனுக்கு உண்டான தாகம், மனித குலம் அனுபவிக்கும் தாகங்களையும், அவற்றை தீர்த்துக்கொள்ள நாம் பயன்படுத்தும் தவறான வழிகளையும் சிந்திக்க ஒரு வாய்ப்பாக உள்ளது.

குளிர்ப் பானங்கள் பற்றி, சில ஆண்டுகளுக்குமுன் வெளியான ஒரு தொலைக்காட்சி விளம்பரம் நினைவுக்கு வருகிறது. முப்பது நொடிகள் காட்டப்படும் இந்த விளம்பரத்தின் ஆரம்பத்தில், ஒருவர், தரையில் முகம் குப்புறப் படுத்து, ஊர்ந்தபடியே ஒரு குளிர்சாதன பெட்டிக்கு அருகில் செல்வார். மிகவும் சிரமப்பட்டு, அந்தக் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து, தட்டுத்தடுமாறி, குளிர்பானம் நிறைந்த ஒரு பாட்டிலை எடுப்பார். குளிர்சாதனப் பெட்டியின் கதவை மூடுவார். திரை இருட்டாகும். அந்தக் குளிர் பானத்தின் பெயர் திரையில் வரும், அதைத் தொடர்ந்து, Obey your thirst... அதாவது, “உன் தாகத்திற்கு கீழ்ப்படி” என்ற வார்த்தைகள் வரும்.

தாகங்களை வெல்வதற்கு, அல்லது, அவற்றைச் சமாளிப்பதற்குக் கற்றுக்கொள்வதே வாழக்கைக்குத் தேவையான, பயனுள்ள பாடங்கள். வியாபார உலகம், விளம்பர உலகம் கற்றுத்தரும் பாடங்களோ, முற்றிலும் வேறுபட்டவை. “தாகத்திற்கு கீழ்ப்படியுங்கள்” என்று இந்த உலகம் சொல்லித்தருகிறது.

இந்த உலகம் சொல்லும் தாகம் வெறும் உடல் தாகம் அல்ல. மாறாக, பொருளுக்கு, பதவிக்கு, செல்வத்திற்கு, பெருமைக்கு, அழகுக்கு, ஆசைகளுக்கு என்று, பல வகைகளிலும் நம்மில் எழும் தாகங்களுக்குக் கீழ்ப்படியச் சொல்கிறது இந்த உலகம். இந்தத் தாகங்களைத் தீர்க்கும் முயற்சிகள், கழுத்தறுக்கும் போட்டிகளாக மாறலாம். அந்தக் கழுத்தறுப்பில் சிந்தும் இரத்தத்தைக் குடித்தாகிலும், நம் தாகத்தைத் தணித்துக் கொள்ளவேண்டும் என்று பாடங்கள் சொல்லித்தரப்படுகின்றன இந்த உலகத்தில்.

இவ்வகைத் தாகங்கள் நம்மை ஆட்டிப் படைக்கும்போது, அவற்றிற்குக் கீழ்ப்படியாமல், எதிர்த்து நிற்கவேண்டிய துணிவை நாம் பெறவேண்டும். அந்தத் துணிவு, இறுதியில், நம்மை சிலுவையில் அறைந்தாலும், அந்தச் சிலுவையிலும் தாகத்தோடு நிற்கக்கூடியத் துணிவை, கல்வாரியில், சிலுவையில், தாகத்தோடு போராடிய வீரத்திருமகன் இயேசு நமக்குத் தரவேண்டும் என்று செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.