2017-10-31 15:02:00

கிறிஸ்தவ விதையை விதைப்பதற்கு துணிச்சல் தேவை


அக்.31,2017. இறையாட்சியை வளரச் செய்வதற்கு, கடுகு விதையைப் போடவும், புளிப்பு மாவைக் கரைப்பதற்கும் துணிச்சல் தேவைப்படுகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலையில் மறையுரையாற்றினார்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில், இச்செவ்வாய் காலையில் நிறைவேற்றிய திருப்பலியில், இயேசு, இறையாட்சியை கடுகு விதைக்கும், புளிப்பு மாவிற்கும் ஒப்பிடும் லூக்கா நற்செய்தி வாசகத்தை (லூக்.13,18-21) மையப்படுத்தி மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடுகு விதையும், புளிப்பு மாவும் சிறியவை எனினும், அவை தங்களுக்குள்ளே சக்தியைக் கொண்டு வளர்கின்றன, அதேபோல் இறையாட்சியின் வல்லமையும் அதற்குள்ளிலிருந்தே வெளிவருகின்றது என்று, திருத்தந்தை மறையுரையில் கூறினார்.

மேலும், இத்திருப்பலியின் முதல் வாசகமான, புனித பவுல் உரோமையருக்கு எழுதிய மடலில் (உரோ.08,18-25), வாழ்வில் எவ்வளவு பதட்டநிலைகள் உள்ளன என்றும், ஆயினும் அவை எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப்போகும் மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என்று பவுல் சொல்கிறார் என்றும் உரையாற்றினார் திருத்தந்தை.

பதட்டநிலை, துன்பத்திற்கும், மாட்சிமைக்கும் இடையே இடம்பெறுவது என்று விளக்கிய திருத்தந்தை, பதட்டநிலைகளில் இறையாட்சியின் மாபெரும் வெளிப்பாடு குறித்த எதிர்பார்ப்பும் இருக்கின்றது, நாம் மட்டுமல்ல, படைப்பே எதிர்பார்க்கின்றது என்றும் கூறினார். விதையை விதைக்கும்பொழுது அதை இழக்கின்றோம், புளிப்பை மாவைக் கரைக்கும் போது கரங்கள் அழுக்காகின்றன, ஏனென்றால் இறையாட்சியை விதைக்கும்போது எப்போதும் சில இழப்புகள் இருக்கின்றன, எனவே இறையாட்சியை வளரச் செய்வதற்கு, கரங்கள் அழுக்குப் படிவதற்கு நம்மை அனுமதிக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

நம்பிக்கையில் வாழ்வதன் பொருள் பற்றியும் விளக்கிய திருத்தந்தை, நம்பிக்கை தூய ஆவியாரின் கொடை, ஆவியார் நம்மில் இருந்துகொண்டு, பெரும் விடுதலையையும்,  மாட்சியையும் அளிக்கிறார் என்றும், நம்மிலும், படைப்பிலும் இருந்து செயலாற்றும் சக்தி தூய ஆவியார், அவரே நமக்கு நம்பிக்கை அளிக்கின்றார் என்றும் கூறினார்.

நம்பிக்கை, மிகவும் தாழ்மையான புண்ணியமாகும், நம்பிக்கையுள்ள இடத்தில் தூய ஆவியார் இருக்கின்றார் என்றும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் எதிர்பார்ப்பில் தூய ஆவியார் இருக்கின்றார் என்பதை நாம் நம்புகின்றோமா என்ற கேள்வியோடு மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.