2017-10-23 16:16:00

"தண்ணீரும் காலநிலையும்" உலக மாநாட்டுக்கு திருத்தந்தை செய்தி


அக்.23,2017. "தண்ணீரும் காலநிலையும்" என்ற தலைப்பில் உரோம் நகரில் இத்திங்களன்று தொடங்கியுள்ள உலக மாநாட்டுக்குச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த மூன்று நாள் மாநாட்டில் கலந்துகொள்கின்ற திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வழியாக அனுப்பியுள்ள செய்தியில், தண்ணீர் எனும் கொடை, வருங்கால மனித சமுதாயத்திற்கென பாதுகாக்கப்பட வேண்டியதன் வழிகள் குறித்து கலந்துரையாடும் இம்மாநாட்டின் பிரதிநிதிகளுக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை. 

காலநிலை மாற்றத்தால் கடுமையாய் அச்சுறுத்தப்பட்டிருக்கும் நாடுகளிலுள்ள நம் சகோதர, சகோதரிகளுக்கு உதவுவதற்கு, இம்மாநாடு வழியமைக்கும் என்றும், நம் பொதுவான இல்லமாகிய பூமியைப் பாதுகாப்பதற்கு, சிறந்த வழிகளை உருவாக்குவதற்கு, இம்மாநாட்டினருக்கு இறைவன் ஞானத்தை அருளவேண்டுமென்று திருத்தந்தை செபிக்கின்றார் என்றும் அச்செய்தி கூறுகின்றது.

அக்டோபர் 23, இத்திங்கள் முதல், அக்டோபர் 25 வருகிற புதன்வரை நடைபெறும் இந்த உலக மாநாட்டில், கர்தினால் பரோலின் அவர்களும் உரையாற்றினார்.

மேலும், உலக உணவு திட்ட அமைப்பின் செயல்திட்ட இயக்குனர், David Beasley அவர்கள், இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.