2017-10-19 14:01:00

பாசமுள்ள பார்வையில்.. சிக்கனத்தைக் கற்றுக்கொடுக்கும் தாய்


பிலிப்பைன்ஸில் வாழ்ந்து வருகின்ற யூஃப்ரோசினா என்பவரின் கணவர், சில ஆண்டுகளுக்கு முன்னர், அவரை விட்டுவிட்டுப் போய்விட்டார்; அத்தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். ஆகவே தன் பிள்ளைகளுக்காக, கஷ்டப்பட்டு உழைத்து, பணம் சம்பாதித்து, படுசிக்கனமாக வாழவேண்டிய சவாலை எதிர்கொண்டார் யூஃப்ரோசினா. அப்படி சிக்கனமாகச் செலவழித்து குடும்பம் நடத்தி வரும்போது, கையிலிருக்கும் பணத்தை செலவுசெய்யும் விதம் பற்றி பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்கிறார் அத்தாய். எடுத்துக்காட்டுக்கு ஒன்றைச் சொல்ல வேண்டுமானால், பிள்ளைகள் தங்களுக்குப் பிடித்தமான ஏதோவொன்றைப் பார்த்து அதை வாங்கித் தரும்படி கேட்கும்போது, அது வேண்டாம் என பட்டென்று சொல்லிவிடாமல், “உனக்கு வேண்டுமென்றால் அதை நீ வாங்கிக்கொள்ளலாம், ஆனால் நீ தீர்மானிக்க வேண்டும். நம்முடைய கையில் ஒரு பொருளை மட்டுமே வாங்குவதற்குப் பணம் இருக்கிறது. இந்தப் பணத்தில், நீ கேட்கிற பொருளை வாங்கலாம், இல்லையென்றால் இந்த வாரம், சாதத்தோடு சேர்த்து சாப்பிடுவதற்கு கொஞ்சம் இறைச்சியோ காய்கறியோ வாங்கலாம். இப்போது சொல், உனக்கு எது வேண்டும்?” என அவர்களுக்கு நியாயத்துடன் பேசுவார். இதனால் பிள்ளைகளும், அம்மா சொல்லவந்ததைப் புரிந்துகொண்டு, வேறெதாவது வாங்குவதற்குப் பதிலாக, சாப்பாட்டுக்குத் தேவையானதை வாங்குகிறார்கள்.

பொதுவாக, பணத்தைச் சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும் என்று சொல்வது எளிது, செய்வதுதான் கஷ்டம். முக்கியமாக, அப்பா அம்மாவுடன் இருக்கிற ஒருவருக்கு பாக்கெட் மணி கிடைக்கிறதென்றால் அல்லது அவரே சம்பாதிக்கிறவராக இருந்தால் இது மிகவும் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் சிக்கனமே சிறப்பு தரும்! அதை அம்மாவின் சிக்கனம் கற்றுத் தருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.