இளம் தந்தையோருவர், தன் 5 வயது மகனுடன் சேர்ந்து, அவர் புதிதாக வாங்கியிருந்த காரை துடைத்துக்கொண்டிருந்தார். அப்பொழுது அச்சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டிக் கொண்டிருந்தான். சத்தத்தைக் கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைக்கேறவே, அவர், மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார், அவர் தன் மகனை அடித்தது, தன் கையில் வைத்திருந்த ஸ்பேனரை (Spanner) கொண்டு என்பதை.
வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினார். "பல எலும்புகள் முறிந்துவிட்டதால், இனி விரல்களை குணமாக்க முடியாது. அவற்றை வெட்டியெடுக்க வேண்டும்" என்று மருத்துவர்கள் கூறினர். வலி நிறைந்த கண்களுடன், மகன், அப்பாவை பார்த்து, “அப்பா.. என் விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?” என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார் தந்தை.
வெளியில் நின்றிருந்த தன் காரை பல முறை எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துக்கொண்டு காரின் முன்புறம் அமர்ந்தபோதுதான் தன் மகன் செய்த கீரல்களை கவனித்தார். அங்கு - “ஐ லவ் யூ அப்பா” என்ற சொற்கள் இருந்தன.
மனிதர்களைப் பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!! எப்பொழுது, மனிதர்களை நேசித்து, பொருட்களைப் பயன்படுத்தப்போகிறோம்?
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |