2017-10-11 15:41:00

திருத்தந்தை : உலகின் அமைதிக்காக செபமாலை செபியுங்கள்


அக்.11,2017. உலகில் அமைதி நிலவுவதற்காக, நாம் எல்லாரும் செபமாலை செபிக்குமாறு, குறிப்பாக, இந்த அக்டோபர் மாதத்தில் செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், இப்புதன் காலையில் வழங்கிய பொது மறைக்கல்வியுரையின் இறுதியில் இவ்வாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாத்திமாவில், அன்னை மரியா கடைசிமுறையாக காட்சியளித்ததன் நூறாம் ஆண்டு, அக்டோபர் 13, வருகிற வெள்ளியன்று நிறைவடையும் இவ்வேளையில், ஆண்டவரின் அன்னையும், மறைப்பணிகளின் அரசியுமான அன்னையை நாம் நோக்குவோம் என்று கூறினார்.

உலகின் அமைதிக்காக, அன்னை மரியை நோக்கி செபமாலை செபிப்பதன் வழியாக, மிகவும் வன்மை நிறைந்த ஆன்மாக்களின் இதயங்கள், தங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களிலிருந்து வன்முறையைக் கைவிட்டு, வன்முறையற்ற சமூகங்களைக் கட்டியெழுப்பவும், நம் பொதுவான இப்பூமி மீது அக்கறை செலுத்தவும் இயலும் என்று,   திருத்தந்தை கூறினார்.

செபத்தில் கடவுளிடம் நாம் விண்ணப்பிக்கும்போது, இயலக்கூடாதது என்று, எதுவுமே இல்லை என்றும், நாம் எல்லாரும், அமைதியை ஏற்படுத்துபவர்களாக மாற முடியும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று  கூறினார்.

போர்த்துக்கல் நாட்டின் பாத்திமாவில், ஜசிந்தா, லூசியா, பிரான்சிஸ் ஆகிய மூன்று சிறாருக்கும், 1917ம் ஆண்டு மே 13ம் தேதி முதல், அக்டோபர் 13ம் தேதி வரை ஆறு முறைகள் காட்சி கொடுத்தார் அன்னை மரியா. அவ்வேளைகளில், அன்னை மரியா, உலகின் அமைதிக்காக செபமாலை செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.