2017-10-10 16:06:00

இந்திய ஆயர்களுக்கு திருத்தந்தை கடிதம்


அக்.10,2017. இந்தியாவிலுள்ள கத்தோலிக்கத் திருஅவையின் பாதை, தனித்துவிடப்பட்ட மற்றும், பிரிவினை கொண்டதாக இல்லாமல், மதிப்பும், ஒத்துழைப்பும் கொண்டதாக இருக்க வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்திய ஆயர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவில் இச்செவ்வாயன்று உருவாக்கப்பட்டுள்ள மற்றும், விரிவாக்கப்பட்டுள்ள புதிய மறைமாவட்டங்களில், சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் விசுவாசிகளுக்கு மேய்ப்புப்பணியாற்றுவதற்கு, கீழை வழிபாட்டுமுறை பேராயத்திற்கு அனுமதி வழங்குவதாகத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்திய ஆயர்களுக்கு திருத்தந்தை எழுதியுள்ள ஒரு நீண்ட கடிதத்தில், இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இந்தியாவில் இலத்தீன் வழிபாட்டுமுறையின் மறைமாவட்டங்களில் வாழ்கின்ற, சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் விசுவாசிகளின் மேய்ப்புப்பணி தேவைகள் நிறைவேற்றப்படுவது தொடர்பாக, முந்தைய திருத்தந்தையர் 16ம் பெனடிக்ட், புனித 2ம் ஜான் பால் ஆகிய இருவரின் செயல்பாடுகளையும் குறிப்பிட்டுள்ளார்.

சீரோ-மலபார் வழிபாட்டுமுறை சமூகங்கள் விழாக்கள் கொண்டாடவும், மற்ற நிகழ்வுகளை நடத்தவும், இலத்தீன் வழிபாட்டுமுறை திருஅவை, தனது கட்டடங்களைக் கொடுத்து உதவுமாறும், இவ்விரு வழிபாட்டுமுறைகளுக்கு இடையே ஒத்துழைப்பும், நல்லிணக்கமும் தொடர்ந்து நிலவ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்தியாவில் கத்தோலிக்கத் திருஅவை, திருத்தூதர் புனித தோமையாரின் போதனையால் வளர்ந்து, பின் கல்தேய மற்றும் அந்தியோக்கிய திருஅவைகளின் மரபுகளால் வளர்ந்தது என்பதையும், பின் 16ம் நூற்றாண்டிலிருந்து இலத்தீன் வழிபாட்டுமுறை மறைபோதகர்களின் முயற்சிகள் வழியாக, திருஅவை பரவியது என்பதையும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.