2017-10-06 09:07:00

பாசமுள்ள பார்வையில்.. எதார்த்தத்தை உணர வைத்த தாய்


பெரியவர்களாகிவிட்டால், எல்லாவற்றையும் தன் விருப்பம்போல் செய்யலாம் என்ற ஓர் ஆசை, ஒன்பது வயது நிரம்பிய கயல்விழியின் மனதில் அடிக்கடி எழுந்துவந்தது. இதை கயல்விழி, தன் அம்மாவிடம் சொல்லிக்கொண்டே இருப்பாள். மகளுக்கு வாழ்வின் எதார்த்தத்தை புரிய வைக்க விரும்பினார் தாய். அதனால் காலங்களின் தேவதையிடம் மகளின் ஆசை பற்றிச் சொன்னார் தாய். எல்லாப் பிறந்த நாளும் ஒரே நாளில் வரவேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொண்டே, அன்று உறங்கச் சென்றாள் கயல்விழி. சில நிமிடங்களில் படுக்கையின் அருகே ஓர் அழகிய பெண், கயல்விழியின் போர்வையை விலக்கியபடி நின்றுகொண்டிருந்தார். அப்பெண் கயல்விழியிடம், `நான்தான் காலங்களின் தேவதை. யாருக்காவது காலம் குறித்த ஆசைகள் இருந்தால் எனக்குத் தெரிந்துவிடும். உன்னைப் பெரிய ஆளாக மாற்றுவதற்குமுன், பெரியவர்கள் மனதுக்குள்ளே உன்னைக் கூட்டிக்கொண்டு போகிறேன். சிறிது நேரம் அங்கே இருந்து பார். அதன்பிறகும் உன் ஆசை அப்படியே இருந்தால், உடனே பெரியவளாக ஆக்கிவிடுகிறேன் என்றார், அத்தேவதை. முதலில், அறையில் உட்கார்ந்திருந்த கயல்விழியின் அப்பாவின் மனதுக்குள் அவளைக் கூட்டிச்சென்றார் தேவதை. அப்பாவின் மனது மிகவும் படபடப்புடன் இருந்தது. நாளைக்குள் இந்த புராஜெக்ட்டை கொடுக்கவில்லை என்றால், அலுவலகத்தில் நிர்வாகி திட்டுவாரே. ச்சே... பேருக்குத்தான் அவர் நிர்வாகி. ஒருமணி நேரம் ஓய்வாக இருக்க முடிகிறதா? எனக்குக் கீழே இருக்கிறவர்களிடம் வேலையை வாங்கி அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. பிறர் செய்யும் தவறுகளுக்கெல்லாம் நான் திட்டு வாங்குகிறேன். பத்துமணி நேரம் அலுவலகத்தில் இருந்துவிட்டு வந்தும், வீட்டிலேயும் அதே வேலை. ஞாயிற்றுக்கிழமை கடற்கரைக்குப் போக வேண்டும் என்று, ஒரு மாதமாகத் திட்டம் போட்டும் முடியவில்லை. பழைய நண்பர்கள் வீட்டுக்கு ஒருமணி நேரம் போய் செஸ் விளையாட ஆசைப்பட்டும் நடக்கவில்லை... ச்சே... கயல்விழி மாதிரி குழந்தையாகவே இருந்திருக்கலாம்.. இப்படி அப்பாவின் மனம் புலம்பியதைப் பார்த்து, கயல்விழி சொல்வதறியாது திகைத்துப் போனாள். பின் அம்மாவின் மனதுக்குள்ளும் போய்வர கயல்விழி விரும்பவில்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.