2017-10-06 09:34:00

திருத்தந்தை : உங்கள் மரபுகளின் வேர்களைக் கண்டறியுங்கள்


அக்.05,2017. யார் தங்கள் மரபுகளின் வேர்களைக் கண்டுகொள்கிறார்களோ, அவர்களே மகிழ்ச்சியின் மனிதர்கள் மற்றும், அந்த மகிழ்ச்சியே அவர்களின் பலம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலையில் மறையுரையாற்றினார்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாளின் முதல் வாசகமான நெகேமியா நூலின் 8ம் பிரிவின் பகுதிகளை மேற்கோள்காட்டி, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

துன்பத்தின் அழுகுரலிலிருந்து ஆனந்தக்கண்ணீருக்கும், பலவீனம் மற்றும் பிரிவின் அழுகையிலிருந்து, தன் மக்களோடு ஒன்றிணையும் மகிழ்ச்சிக்கும் இம்மக்கள் செல்கிறார்கள் என்றுரைத்த திருத்தந்தை, நம் மரபுகளின் வேர்களைத் தேடிச் செல்கிறோமா அல்லது நம்மை நாமே சிறைப்படுத்தி தனிமையில் வாழ விரும்புகிறோமா என்பது குறித்து, ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் என்று கூறினார்.

அழுவதற்கு அஞ்சும் எவரும், சிரிப்பதற்கும் அச்சமுறுவார்கள், ஏனென்றால், கவலையின் அழுகையைத் தொடர்ந்து ஆனந்தக்கண்ணீர் வருகிறது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் பாவங்கள் குறித்த அழுகைக்கான அருளை நாம் இறைவனிடம் வேண்டுவோம், ஏனென்றால் அந்த அழுகையைத் தொடர்ந்து மன்னிப்பின் விளைவான மகிழ்ச்சி கிட்டும் என மேலும் கூறினார்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.