2017-10-03 15:52:00

ரொஹிங்கியா அகதிகள் திருத்தந்தையின் பயணத்தில் நம்பிக்கை


அக்.03,2017. மியான்மாரில் அடக்குமுறைக்கு அஞ்சி, நாட்டைவிட்டு வெளியேறியுள்ள ரொஹிங்கியா இன புலம்பெயர்ந்துள்ள மக்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மியான்மார் திருத்தூதுப்பயணத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளனர் என, UCA செய்தி கூறுகின்றது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மியான்மார் திருத்தூதுப்பயணம், அந்நாட்டில் மாற்றத்தைக் கொணரும் என்று தாங்கள் நம்புவதாக, பங்களாதேஷ் நாட்டில் புலம்பெயர்ந்துள்ள ரொஹிங்கியா மக்கள் கூறியுள்ளனர்.

ரொஹிங்கியா இனத்தவரான Syed Alam அவர்கள் பேசுகையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மியான்மாருக்கும், பங்களாதேஷிற்கும் திருத்தூதுப்பயணம் மேற்கொள்வது நல்லதோர் அடையாளம், பல்வேறு நாடுகளில் அமைதியை ஊக்குவித்துள்ள திருத்தந்தை, மியான்மாருக்கு அமைதியைக் கொணர்வார் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்.

மேலும், பங்களாதேஷ் நாட்டிற்கு, நான்கு இலட்சத்து இருபதாயிரத்துக்கு மேற்பட்ட ரொஹிங்கியா மக்கள் புலம்பெயர்ந்துள்ளவேளை, ஏறத்தாழ ஏழு இலட்சத்து இருபதாயிரம், ரொஹிங்கியா மற்றும் பங்களாதேஷ் சிறாருக்கு உதவிக்கு விண்ணப்பித்துள்ளது, ஐ.நா.வின் யூனிசெப் நிறுவனம்.

குழந்தைப்பருவம் மறுக்கப்பட்டுள்ள இச்சிறார், நல்லதோர் வருங்காலத்தை அமைப்பதற்கு, உதவிகள் தேவை என, யூனிசெப் நிறுவன செயல்திட்ட இயக்குனர், அந்தோனி லேக் அவர்கள் கூறியுள்ளார்.

மியான்மாரில் 135 வகையான பழங்குடி இனத்தவர் வாழ்கின்றனர். 

ஆதாரம் : UCAN/UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.