2017-09-28 18:31:00

விடுவிக்கப்பட்ட சலேசிய அருள்பணியாளர் பிரதமருடன் சந்திப்பு


செப்.,28,2017. ஏமன் நாட்டில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது கடத்தப்பட்டு 18 மாதங்களுக்குப்பின் விடுவிக்கப்பட்ட சலேசிய துறவுசபையின் அருள்பணி டாம் உழுன்னலில் அவர்கள் இவ்வியாழனன்று இந்தியா திரும்பி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாடினார்.

டெல்லியிலுள்ள இந்திரா காந்தி விமானதளத்தில் உரோமையிலிருந்து வந்திறங்கிய அருள்பணி டாம் அவர்களை, முதலில் சுற்றுலாத்துறை அமைச்சர் அல்போன்ஸ் கன்னதானம் அவர்கள் வரவேற்று, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அழைத்துச் சென்றார்.

தான் நல்லபடியாக விடுவிக்கப்பட்டதற்கு இறைவனுக்கும், இந்த விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றியுரைப்பதாக தெரிவித்த அருள்பணி டாம் அவர்கள்,  அரசுத்தலைவர், பிரதமர் உட்பட நாட்டின் தலைவர்கள் அனைவருக்கும், மக்களுக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி கூறுவதாகத் தெரிவித்தார்.

பிரதமருடனான சந்திப்புக்குப்பின் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களையும் சந்தித்தார் அருள்பணி டாம்.

2010ம் ஆண்டு முதல் ஏமன் நாட்டில் பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த அருள்பணி டாம் அவர்கள், கடந்த ஆண்டு மார்ச் மாதம் இஸ்லாமிய தீவிரவாதிகளால் ஏமன் நாட்டின்  Aden நகரிலிலுள்ள அன்னை தெரேசா பிறரன்பு சபை சகோதரிகள் இல்லம் தாக்கப்பட்டபோது, அங்கிருந்து, இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். பல்வேறு முயற்சிகளுக்குப்பின் இம்மாதம் 13ம் தேதி விடுதலையடைந்த அருள்பணி டாம் அவர்கள், முதலில் உரோம் நகர் வந்து திருத்தந்தையை சந்தித்தபின், இப்புதனன்று புறப்பட்டு, வியாழன் காலையில் டெல்லி வந்தடைந்தார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.