2017-09-18 15:59:00

வாரம் ஓர் அலசல் – இதயங்களைக் காப்போம், இதய அமைதி பெறுவோம்


செப்.18,2017. கடந்த வாரத்தைத் திரும்பிப் பார்க்கும்போது மனதுக்கு மகிழ்வுதரும், அதேநேரம் மனதைக் கனக்க வைக்கும் நிகழ்வுகள் நடந்துள்ளன. ஏமன் நாட்டின் ஏடனில் கடந்த 18 மாதங்களாக, இஸ்லாம் தீவிரவாதிகளின் பிணையலிலிருந்த இந்திய அருள்பணியாளர் டாம் உழுன்னலில் அவர்கள், செப்டம்பர் 12, கடந்த செவ்வாயன்று விடுதலை செய்யப்பட்டார். தென் அமெரிக்க நாடான கொலம்பியத் தலைநகர் பொகோட்டாவில், செப்டம்பர் 29ம் தேதியன்று கருணைக் கொலை செய்வதற்குத் தீர்மானித்திருந்த, Consuelo de Socorro Cordoba என்ற பெண், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை நேரில் பார்த்து ஆசீர்பெற்றபின் தனது தீர்மானத்தை முழுவதும் கைவிட்டுவிட்டார். மூளையை கடுமையாய்த் தாக்கிய ஒருவகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இப்பெண், 87 முறைகள் அறுவை சிகிச்சை செய்துள்ளாராம். இவரால் திட உணவு சாப்பிட முடியாததால், இன்னும் ஆறு அறுவை சிகிச்சைகளை இவர் செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 9ம் தேதி திருத்தந்தையைப் பார்ப்பதற்காக முதல் வரிசையில் உட்கார வைக்கப்பட்டிருந்த இவரை, திருத்தந்தை அணைத்து முத்தமிட்டார். அவ்வளவுதான். இப்போது நான் முழுவதுமாக மாறிவிட்டேன், கடவுளுக்கு நன்றி எனச் சொல்லியுள்ளார். நாமும் இவர்களோடு சேர்ந்து இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

அதேநேரம் மியான்மாரில் ரொஹிங்கியா முஸ்லிம் இன மக்கள் எதிர்க்கொள்ளும் துன்பங்கள், பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் தொடர்பாக ஒவ்வொரு நாளும் மனித உயிர்கள் காவு கொடுக்கப்படுவது, வட கொரியாவின் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை அச்சுறுத்தல், இந்தியாவின், குறிப்பாக தமிழகத்தின் அரசியல் சூழல்.. இப்படி பல நிகழ்வுகளை நோக்கும்போது இதயம் வலிக்கின்றது. உலகிற்கு எப்போது அமைதி திரும்பும்? உலக மக்கள் அமைதிக் காற்றை எப்போது சுவாசிப்பார்கள்? போன்ற கேள்விகள் அடுக்கடுக்காய் எழுகின்றன.

உலகின் இன்றையச் சூழலில் நல்மனம் கொண்ட எல்லாரும் விரும்புவது அமைதி. ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் தேதியை, அகில் உலக அமைதி நாளாகக் கடைப்பிடிக்கின்றது. கத்தோலிக்கத் திருஅவை, சனவரி முதல் நாளை உலக அமைதி நாளாகச் சிறப்பிக்கின்றது. நாடுகளுக்குள்ளும், நாடுகளுக்கு இடையேயும், மக்கள் மத்தியிலும், அமைதி பற்றிய கருத்தியல்களை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் ஐ.நா.பொது அவை உலகளாவிய அமைதி நாளை உருவாக்கியது. வருகிற வியாழனன்று கடைப்பிடிக்கப்படும் இந்த உலக அமைதி நாளுக்கு, “அமைதிக்காக ஒன்றிணைவோம்: மதிப்பு, பாதுகாப்பு, மற்றும் எல்லாருக்கும் மாண்பு” என்பது தலைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வில் உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளும் இந்நாளைச் சிறப்பிக்கின்றன. இக்காலத்தில் அதிகமாக நாடுகளைப் பாதிக்கும் புலம்பெயர்வோர் மற்றும் குடிபெயர்வோர் மீது மிகுந்த அக்கறை காட்டுவதற்கு இந்த உலக நாள் சிறப்பாக அழைப்பு விடுக்கின்றது. 

சுவாமி விவேகானந்தர் சொன்னார் : “அதிகமாகப் பேசினால் அமைதியை இழப்பாய். ஆணவமாகப் பேசினால் அன்பை இழப்பாய். வேகமாகப் பேசினால் அர்த்தத்தை இழப்பாய். கோபமாகப் பேசினால் குணத்தை இழப்பாய். வெட்டியாகப் பேசினால் வேலையை இழப்பாய். வெகுநேரம் பேசினால் பெயரை இழப்பாய். பெருமையாகப் பேசினால் ஆண்டவரின் அன்பை இழப்பாய்” என்று..

 

சென்னையில் வேலை பார்க்கும் ராஜ்குமார் என்பவர், 2007ம் ஆண்டில் ஒருநாள், தனது சொந்த ஊரான குடியாத்தத்தில் உள்ள குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தார். அவர் பயணம் செய்துகொண்டிருந்த அதே பேருந்தில் ஒரு கிராமத்து அம்மாவும், அவரின் ஏழு வயது மகள் மணிமேகலையும் பயணம் செய்தனர். மணிமேகலைக்கு கடுமையான இதய நோய் என்பதும், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அவ்விருவரும் வந்து கொண்டிருக்கின்றனர் என்பதும், சென்னைக்கு புதிது என்பதுடன் கையில் போதுமான பணம் இல்லை என்பதும், ராஜ்குமார் அவர்களுக்குத் தெரியவந்தது. வீட்டிற்கு பிறகு போகலாம், முதலில் இவர்களுக்கு உதவுவோம் என்று முடிவு செய்து, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் ராஜ்குமார். மணிமேகலையின் அழகுச் சிரிப்பும், பேச்சும் காந்தம் போல இழுக்க, திரும்பத் திரும்ப மருத்துவமனைக்குச் சென்று பார்த்து அன்பையும் ஆறுதலையும் வழங்கினார் இவர். அரசு மருத்துவமனையில் மருத்துவ கட்டணம் கிடையாது. ஆனால் தொடர்ந்து தங்கியிருக்கும்போது ஏற்படும் குடும்பத்தினரின் பிற செலவிற்காக நண்பர்கள் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டுபோய்க் கொடுத்தார். இன்னும் கொஞ்சம் பணம் திரட்டினால் மணிமேகலையை விரைவில் குணப்படுத்தலாம் என்பது தெரியவரவே, மீண்டும் பணத்தை திரட்ட தொடங்கினார். முன்பின் தெரியாத யாரோ ஒருவரின் உயிருக்காக ராஜ்குமார் பாடுபடுவதைக் கேள்விப்பட்ட அவர் வேலை பார்த்த டாடா நிறுவனம், ராஜ்குமாரை அழைத்து உனக்கு தேவைப்படும் பணத்தை கம்பெனி அறக்கட்டளையில் இருந்து தருகிறோம் என்று சொல்லி, தந்தும் விட்டனர், மணிமேகலையும் அபாயக்கட்டத்தை தாண்டி பிழைத்துக்கொண்டார்.

மணிமேகலையுடன் ராஜ்குமார் தனது சேவையை நிறுத்திக்கொள்வார் என்று எல்லாரும் நினைத்துக் கொண்டிருந்தபோது, இன்னும் பல மணிமேகலைகளுக்கு நமது உதவி தேவை என்று முடிவு செய்து, இதய நோயாளிகளுக்கான சிகிச்சை களத்தில் முழுமையாக இறங்கிவிட்டார் ராஜ்குமார். தினமலரில் வெளிவரும் உயிர்காக்க உதவுங்கள் விளம்பரங்களில் உள்ள நபர்களை நேரில் தொடர்பு கொள்வது, சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுடன் பேசுவது என்று, நிறைய நேரம் செலவிட்டு, கிடைத்த அவர்கள் பற்றிய விவரங்களையும், தேவையையும் டாடா அறக்கட்டளையிடம் கொடுத்துவிடுவார் ராஜ்குமார். அவர் பரிந்துரை செய்யும் நோயாளிகளுக்கு அறக்கட்டளை உதவ ஆரம்பித்தது. இப்படி 2007ம் ஆண்டில் ஆரம்பித்த இதய நோயாளிகளுக்கான இலவச சிகிச்சைக்கான பயணம், 2017ம் ஆண்டு வரை தொடர்கிறது. ராஜ்குமார் அவர்களின் முயற்சியால் இதுவரை 347 நோயாளிகள் சிகிச்சை பெற்று பூரணநலம் பெற்றுள்ளனர். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ராஜ்குமார் அவர்கள், டாடா நிறுவனத்தைவிட்டு வெளியேறி வேறு நிறுவன வேலையில் சேர்ந்துவிட்டார் ஆனாலும் டாடா அறக்கட்டளை, இவர் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக இப்போதும் இவர் பரிந்துரை செய்யும் நோயாளிகளுக்கு உதவி வருகிறது. இதய நோயாளிகள் சிகிச்சை எடுத்துக்கொண்டால், மற்றவர்களைப் போல மகிழ்வாக வாழமுடியும் என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லும் விதத்தில், ராஜ்குமார் அவர்கள் இதய நோயாளியான பத்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இப்போது மகிழ்வாக குடும்பம் நடத்தும் தன் மனைவி பத்மா பெயரில் பத்மா அறக்கட்டளையை உருவாக்கி, சதிஷ், எல்டின் கெல்லி மற்றும் சிவராம் ஆகிய அறக்கட்டளை உறுப்பினர்களுடன் இணைந்து இதய நோயாளிகளுக்கான சேவை தற்போது விரிவுபடுத்தியுள்ளார்.

தன் வேலை நேரம் போக, மற்ற நேரம் முழுவதையும் இதய நோயாளிகளின் நலனிற்காகவே ராஜ்குமார் செலவிடுகிறார். இதயத்தில் ஒட்டை, இதய வால்வு பாதிப்பு, இதய வால்வு மாற்றம் என்று, இதயம் சம்பந்தமான எந்த பிரச்சனை என்றாலும் கவலைப்படவேண்டியது இல்லை, பணம் அதிகம் செலவாகுமோ என்று பயப்படவேண்டியதும் இல்லை. தன்னைத் தொடர்புகொண்டால் முடிந்தளவு உதவுகிறோம் என்று ராஜ்குமார் அவர்கள் சொல்கிறார். 347 இதயங்கள் வாழ்த்தும் ராஜ்குமார் என்று, தினமலர் தினத்தாளில் இந்தத் தகவல் இருந்தது.

ராஜ்குமார் போன்ற நல்ல உள்ளங்களைப் பின்பற்றி இதயங்களைக் காப்போம், இதய அமைதி பெறுவோம்.

பூமியில் விதைக்கப்பட்ட விதைகூட எதிர்ப்பை சமாளித்து முளைத்து விடுகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் மனிதர்களால் வெட்டப்படுகின்ற வாழ்வை அனுபவிக்கும் மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன. ஒருநாள் மட்டுமே வாழ்க்கை, என்ற நிலையிலிருக்கும் பல்வேறு உயிரினங்கள் ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன. இப்படி பலகோடி உயிரினங்கள் அமைதியாக வாழ முடியுமென்றால், நாமும் மகிழ்வாக அமைதியில் வாழலாமே. நம்மை ஆழமாகச் சிந்திக்க வைப்பதற்காக, துயரத்தைத் தந்த பிரச்சனைகளுக்கு மனதார நன்றி சொல்வோம். நமது ஆணவத்தைத் தவிடுபொடியாக்கி, பணிவைக் கற்றுத்தந்த நம் துன்பங்களுக்கு நன்றி சொல்வோம். வாழ்வில் ஒவ்வொரு நிகழ்வும் ஓர் உண்மையைக் கற்றுத்தருகின்றது. வாழ்வோம் நிம்மதியாக, அயலவரும் நிம்மதியாக வாழ உதவுவோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.