2017-09-16 16:29:00

பொதுக்காலம் 24ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னாள் அரசுத்தலைவர் பில் கிளிண்டன் அவர்களும், முதல் முறையாகச் சந்தித்துக்கொண்டபோது, கிளிண்டன், அவரிடம், "நீங்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டபோது, அமெரிக்காவில் அதிகாலை மூன்று மணி. அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியைக் காண, நான் என் மகளைத் தூக்கத்தில் இருந்து எழுப்பினேன்" என்று ஆரம்பித்து, "நீங்கள் அந்தச் சிறையில் இருந்து வெளியே வந்த நேரத்தில் பல TV காமிராக்கள் உங்களையேச் சுற்றிச் சுற்றி வந்தன. உங்கள் முகத்தை மிக நெருக்கமாய் அவர்கள் காண்பித்தபோது, அந்த முகத்தில் நான் கண்ட கோபம், வெறுப்பு இவற்றைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்" என்று தயங்கித் தயங்கிப் பேசினார்.

அவரது தயக்கத்தைப் புரிந்துகொண்ட நெல்சன் மண்டேலா அவர்கள், இவ்வாறு பதிலளித்தார்: "நான் சிறையில் இருந்து வெளியே வந்தபோது எனக்குள் பொங்கியெழுந்த கோபமும் வெறுப்பும் காமிராக்களில் பதியும்படி வெளிப்பட்டதை அறிந்து நான் வருந்தினேன். அந்தக் கோபம், வெறுப்பு எங்கிருந்து வந்தது என்றுதானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன். அந்தச் சிறை வளாகத்தில் நான் நடந்தபோது, எனக்குள் எழுந்த எண்ணங்கள் இருவேறு திசைகளில் சென்றன: 'நெல்சன், உன் வாழ்வில் அர்த்தமுள்ளதென்று நீ நினைத்ததையெல்லாம் அவர்கள் பறித்துக் கொண்டார்கள். நீ வைத்திருந்த கொள்கை இறந்துவிட்டது. உன் குடும்பம் காணாமற் போய்விட்டது. உன் நண்பர்கள் கொலையுண்டு போயினர். இப்போது அவர்கள் உன்னை விடுதலை செய்கிறார்கள். இதோ இந்தச் சிறைக்கு வெளியே நீ சந்திக்கப்போகும் உலகில், உனக்கென ஒன்றும் இல்லை' என்று எனக்குள் ஒலித்த குரல், என்னுள் கோபத்தையும், வெறுப்பையும் கிளறிவிட்டது. இதைத்தான் காமிராக்கள் படம் பிடித்தன. நல்லவேளை, அந்நேரத்தில் மற்றொரு குரலும் எனக்குள் ஒலித்தது. 'நெல்சன், கடந்த 27 ஆண்டுகள் நீ சிறைக்குள் அவர்கள் கைதியாய் இருந்தாய். ஆனால், உள்ளுக்குள் நீ சுதந்திர மனிதனாய் இருந்தாய். இப்போது சிறையை விட்டு வெளியேறும்போது, உன்னையே நீ வெறுப்பில் சிறைப்படுத்திக் கொள்ளாதே. அவர்களது கைதியாக மாறாதே' என்று இந்தக் குரல் எனக்குச் சொல்லித் தந்தது. இரண்டாவது குரலைப் பின்பற்ற முடிவு செய்தேன்" என்று மண்டேலா அவர்கள் விளக்கமளித்தார்.

நல்லதை எடுத்துச் சொன்ன மனசாட்சியின் குரலுக்கு, நெல்சன் மண்டேலா அவர்கள் செவிமடுத்ததால், தன்னைச் சிறைப்படுத்தியவர்களை மன்னிக்க முடிந்தது. தன் எஞ்சிய வாழ்நாட்களை சுதந்திரமாக வாழந்த நெல்சன் மண்டேலா அவர்கள், 2013ம் ஆண்டு, தனது 96வது வயதில், தலை சிறந்த ஒரு தலைவராக, மனிதராக, இவ்வுலக வாழ்வை நிறைவு செய்தார். 27 ஆண்டுகள் அநீதமாக சிறைவைக்கப்பட்டிருந்த அவர் வெளியே வந்தபோது, தன்னைச் சிறைப்படுத்தியவர்களை இனி ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்று தீர்மானித்திருந்தால், தன் வாழ்நாளெல்லாம் வெறுப்பு என்ற சிறைக்குள் வெந்து போயிருப்பார். வரலாற்றில், ஒரு மாமனிதர் என்று, தன் காலடித் தடங்களைப் பதிப்பதற்கு பதில், தன் உள்ளத்தில் பற்றியெரிந்த அந்த வெறுப்புத் தீயில் சாம்பலாகியிருப்பார்.

இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொருவரையும், மனிதராகவும், புனிதராகவும் மாற்றும் அற்புத வரமான மன்னிப்பைப் பற்றி சிந்திக்க, இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது. மன்னிப்பு பெறுவதும், வழங்குவதும், வாழ்வு என்ற நாணயத்தின் இருபக்கங்கள். அவற்றை தனித்தனியே பிரித்துப்பார்க்க முடியாது. நாம் எப்போதெல்லாம் பிறருக்கு மன்னிப்பை வழங்குகிறோமோ, அப்போதெல்லாம் மன்னிப்பைப் பெறுகிறோம். மன்னிப்புடன் வரும் ஆழ்ந்த அமைதியை, நிறைவைப் பெறுகிறோம். இதைத்தான், அசிசி நகர் புனித பிரான்சிஸ், அமைதிக்கென உருவாக்கிய அந்த அழகிய செபத்தில், "மன்னிப்பதாலேயே, நாம் மன்னிப்பு பெறுகிறோம்" என்று சொல்லியிருக்கிறார்.

இயேசு, தன் பணிவாழ்வில் பலமுறை, மன்னிப்பைப்பற்றி பேசினார். மன்னிப்பைச் செயலாக்கினார். மன்னிப்பைப்பற்றி இயேசு சொன்னவற்றை, செய்தவற்றையெல்லாம் சிந்திக்க பல நாட்கள் தேவைப்படும். இன்று, அவர், மன்னிப்பைப் பற்றி கூறிய ஒரு கருத்தைச் சிறிது ஆழமாகச் சிந்திப்போம். ஒருவர் தவறு செய்யும்போது, எத்தனை முறை மன்னிப்பது? நம் எல்லாருக்கும் எழும் இந்தக் கேள்விதான், பேதுருவுக்கும் எழுந்தது. அந்தக் கேள்வியுடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது:

மத்தேயு நற்செய்தி 18: 21-22

அக்காலத்தில் பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.”

ஏழு முறை மன்னிக்கலாமா? இது பேதுருவின் கேள்வி. ஏழு முறை அல்ல, எழுபது தடவை ஏழுமுறை... இது இயேசுவின் பதில். 7,70 என்ற எண்களை வைத்து, கூட்டி, பெருக்கி, கணக்கு போட ஆரம்பிக்கவேண்டாம். இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடந்தது கணக்குப் பாடம் அல்ல. இங்கு பேசப்படுவது எண்கள் அல்ல, எண்ணங்கள். யூதர்களுக்கு ஒரு சில எண்கள் பொருளுள்ள எண்ணங்களாக இருந்தன. 7,12,40... இப்படி. இதில் ஏழு என்பது நிறைவைக் குறிக்கும் ஓர் எண். எனவே, பேதுரு, “தவறு செய்யும் என் சகோதரனை அல்லது சகோதரியை ஏழு முறை மன்னிக்கலாமா?” என்ற இந்தக் கேள்வியைக் கேட்டபோது, ஏதோ பெரிய ஒரு சாதனையைப் பற்றி, ஒரு முழுமையான, நிறைவான முயற்சியைப் பற்றி தான் பேசிவிட்டதாக அவர் எண்ணியிருக்கலாம். இயேசு, எண்களைத் தாண்டி, கணக்கையெல்லாம் தாண்டி எப்போதும் மன்னிக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் சொன்னார்.

இயேசு சொன்னதை, நாம் இவ்வாறு கற்பனை செய்து பார்க்கலாம். “பேதுருவே, நீ கேட்கும் கேள்வி எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ‘எத்தனை முறை மன்னிக்க வேண்டும்’ என்று நீ கேட்பது, ‘எத்தனை முறை சுவாசிக்க வேண்டும்’ என்று கேட்பது போல் உள்ளது. சுவாசிப்பதற்கு ஒரு கணக்கா? சுவாசிப்பதற்கு கணக்கு பார்த்தால், உடல் இறந்துவிடும். அதேபோல், மன்னிப்பதற்கு கணக்கு பார்த்தால்... உள்ளம் இறந்துவிடும்.” இப்படிச் சொல்வதற்கு பதில், இயேசு "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை" என்று கூறினார்.

இயேசு பேதுருவுக்குப் போதித்ததைத் தன் வாழ்வில் கடைபிடித்தார். அவரைப் பொருத்தவரை மூச்சுவிடுவதும், மன்னிப்பதும் அவரது இயல்பாகவே மாறிவிட்டன. இயேசு தன் இறுதி மூச்சுக்காக சிலுவையில் போராடியபோதும் 'தந்தையே, இவர்களை மன்னியும்' என்று சொன்ன கல்வாரி நிகழ்வு நமக்கு நினைவிருக்கும், இல்லையா?

இயேசு தன் இறுதி மூச்சு வரை மன்னிப்பை தன் சுவாசமாக்கியது போல் கோடிக் கணக்கான மக்கள் மன்னிப்பை வாழ்க்கையில் கடைபிடித்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் இன்றைய சிந்தனையின் துவக்கத்தில் நாம் குறிப்பிட்ட நெல்சன் மண்டேலா. மன்னிப்பை மையப்படுத்தி வெளிவந்துள்ள பல செய்திகளில், என் மனதில் ஆழமாய் பதிந்து விட்ட ஒரு செய்தி இது.

2008ம் ஆண்டு Laura Walters Hinson என்ற அமெரிக்க இளம் பெண் ஆப்ரிக்காவின் Rwandaவைப் பற்றிய ஓர் ஆவணப்படம் எடுத்தார். அந்தப் படத்தின் தலைப்பு: As We Forgive - நாங்கள் மன்னிப்பது போல். இந்தப் படம் ஆரம்பிக்கும்போது, திரையில் தோன்றும் முதல் வரிகள் இவை: "சிறையில் இருக்கும் ஒரு கொலைகாரனை நீங்கள் வாழும் பகுதியில் விடுதலை செய்யப்போகிறார்கள் என்றால், உங்களுக்கு எப்படி இருக்கும்? நாளை இந்த அரசு ஒருவரை அல்ல, 40,000 கொலையாளிகளை விடுதலை செய்கிறார்கள். இவர்கள் நம் மத்தியில் வாழப் போகிறார்கள்." மனதை அச்சுறுத்தும் இவ்வரிகளுடன் இந்த ஆவணப்படம் ஆரம்பமாகிறது.

Rwandaவில் ஓர் இனத்தைச் சேர்ந்தவர்களில் 10 லட்சம் பேருக்கு மேல் 1990களில் கொல்லப்பட்டனர் இதில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் குழந்தைகள். இந்தக் கொடூரக் கொலைகளைச் செய்ததாக 70,000 பேருக்கும் மேற்பட்ட வேறு இனத்தைச் சார்ந்தவர்கள் ஒத்துக்கொண்டனர், அவர்கள் கைது செய்யப்பட்டனர். 2005ம் ஆண்டு இவர்களை அரசு விடுவித்தது. தாங்கள் கொலை செய்தது போக எஞ்சியிருந்த அதே மக்கள் மத்தியில் இவர்கள் மீண்டும் வாழ வந்தனர். கொலையாளிகளுக்கும், கொலை செய்யப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையே நடந்த அந்த ஒப்புரவை ‘நாங்கள் மன்னிப்பது போல்’ என்ற இந்த ஆவணப்படம் காட்டுகிறது.

மனதைத் தொடும் பல காட்சிகள், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. கொலையாளிகளை மன்னிக்கவே முடியாது என்று ஆரம்பத்தில் கூறும் மக்கள், முடிவில் அவர்களை மன்னிக்கும் காட்சிகள் மனதைத் தொடுகின்றன. நம்பிக்கையைத் தருகின்றன. அதேபோல், அந்தக் கொலையாளிகளும், உண்மையிலேயே மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுவது, மனதில் ஆழமாய் பதியும் காட்சி. இவர்கள் நடிகர்கள் அல்ல, மன்னிப்பை உண்மையாக வாழ்ந்தவர்கள். இந்த ஆவணப்படம், பல திரைப்பட விழாக்களில் பரிசுகள் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் காட்டப்பட்ட நிகழ்ச்சிகளை மையமாக வைத்து, 2009ம் ஆண்டு, இதேத் தலைப்பில் ஒரு நூல் வெளியாகியுள்ளது. Catherine Larson என்பவர் எழுதிய இந்நூல், பல்லாயிரம் மனங்களில் மன்னிப்பை வழங்கத் தூண்டியுள்ளது.

இந்த ஆவணப் படத்தில் மன்னிப்பைப் பற்றி ஒருவர் சொல்லும் வார்த்தைகள், நமக்கெல்லாம் நல்லதொரு பாடமாக அமைகிறது: "இந்த மக்கள் தங்களது வேதனை, கசப்பு, வெறுப்பு இவற்றிலேயே வாழ்ந்து வந்தால், இந்த உணர்வுகள் இவர்களை முற்றிலும் அழித்துவிடும். ஓர் உலோகக் கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள அமிலமானது எப்படி அந்தக் கிண்ணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, இறுதியில் அந்தப் பாத்திரம் முழுவதையும் கரைத்து, அழித்து விடுகிறதோ, அதேபோல், இவர்கள், தங்கள் உள்ளத்திலிருக்கும் வெறுப்பு உணர்வுகளை வெளியேற்றாமல் இருந்தால், அவை, இவர்களை முற்றிலும் அழித்துவிடும். மன்னிப்பு ஒன்றே இவர்களைக் காப்பாற்றமுடியும்."

நாம் வழங்கும் மன்னிப்பினால் மற்றவர்கள் பெறும் நன்மையைவிட, நாம் பெறும் நன்மையே அதிகம் என்பதை, ஓர் அழகிய ஆங்கிலக் கூற்று இவ்வாறு கூறுகிறது: "Forgive others not because they deserve forgiveness; but because you deserve peace" அதாவது, "மற்றவர்களுக்கு மன்னிப்பு வழங்கு, அவர்களுக்கு மன்னிப்பு தேவை என்பதால் அல்ல; உனக்கு அமைதி தேவை என்பதால், மன்னிப்பு வழங்கு."

கட்டுப்பாடின்றி நம் உள்ளங்களில் வளர்ந்துவிடும் உணர்வுகளால் உருவாகும் ஆபத்தைக் கூறும் ஒரு கதை இது. பிரெஞ்சு எழுத்தாளர், விக்டர் ஹியூகோ (Victor Hugo) அவர்கள் தன் வாழ்வில் இறுதியாக எழுதிய தொண்ணூற்று மூன்று (Ninety Three) என்ற நாவலில் இடம்பெறும் கதை இது:

நடுக்கடலில் சென்ற கப்பலொன்று புயலில் சிக்கியது. காற்றின் வேகத்தால் பல திசைகளிலும் கப்பல் அலைக்கழிக்கப்பட்ட வேளையில், திடீரென கப்பலின் அடித்தளத்திலிருந்து பெரும் ஓசை ஒன்று எழுந்தது. அடித்தளத்தில், சங்கியால் பிணைத்து வைக்கப்பப்பட்டிருந்த பீரங்கி வண்டி, கட்டவிழ்த்து, கப்பலின் சுவர்களில் மோதிக்கொண்டிருந்தது என்பதை, கப்பல் பணியாளர்கள் உணர்ந்தனர். அவர்களில் இருவர், தங்கள் உயிரைப் பணயம் வைத்து, கீழ்த்தளத்திற்குச் சென்று, பீரங்கி வண்டியை மீண்டும் சங்கிலியால் பிணைத்தனர்.

வெளியில் வீசும் புயலைவிட, கப்பலுக்குள் கட்டவிழ்க்கப்பட்ட பீரங்கி வண்டி, கப்பலுக்கு விளைவிக்கக்கூடிய அழிவு பெரும் ஆபத்தானது என்பதை பணியாளர்கள் உணர்ந்ததால், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், அந்த முயற்சியை மேற்கொண்டனர். அதைப்போலவே, நம் மனங்களில் கட்டுப்பாடின்றி அலைபாயும் வெறுப்பு உணர்வுகள், வெளி உலகில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளைவிட அதிக ஆபத்தானவை.

வெறுப்பு, வேதனை என்ற புயல்களும், சூறாவளிகளும் வீசிக்கொண்டிருந்த நாத்சி வதை முகாம்களில், மன்னிப்பு என்ற தென்றலை வீசச் செய்தவர்கள், மனித குலத்திற்கு நம்பிக்கையைக் கொணரும் திருத்தூதர்கள். நாத்சி வதை முகாம் ஒன்றில், சுவற்றில் காணப்பட்ட வரிகள் இவை. அங்கு சித்ரவதைகளை அனுபவித்த ஒரு கைதி இதை எழுதியிருக்க வேண்டும். ஒரு செபம் போல ஒலிக்கும் இந்த வரிகளுடன், நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம். “இறைவா, நல்ல மனதுள்ளவர்களை நினைவு கூர்ந்தருளும். அவர்களை மட்டுமல்ல, தீமை செய்வோரையும் நினைவு கூர்ந்தருளும். அவர்கள் எங்களுக்கு இழைத்தக் கொடுமைகளை மட்டும் நினையாதேயும். அந்தக் கொடுமைகளால் விளைந்த பயன்களையும் நினைவு கூர்ந்தருளும். இந்தக் கொடுமைகளால் எங்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை, ஒருவரை ஒருவர் தேற்றிய மனப்பாங்கு, எங்கள் அஞ்சா நெஞ்சம், நாங்கள் காட்டிய தாராள குணம்... இவற்றையும் நினைவு கூர்ந்தருளும். எங்களை வதைத்தவர்களும், நாங்களும் இறுதித் தீர்வைக்கு வரும்போது, அவர்கள் விளைவித்த தீமைகளால் எங்களுக்கு ஏற்பட்ட பயன்களைக் கண்ணோக்கி, அவர்கள் தீமைகளை மன்னித்து, அவர்களுக்கு நல் வாழ்வைத் தந்தருளும்.”

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.