2017-08-24 15:24:00

பார்சலோனாவில் "அதிக இளையோர், அதிக அமைதி"


ஆக.24,2017. பார்சலோனா நகரில் நிகழ்ந்த வன்முறைத் தாக்குதல்களின் காயங்களிலிருந்து குணம் பெறுவதற்கு, ஐரோப்பிய இளையோர், அந்நகரில் ஆகஸ்ட் 25 முதல், 27 முடிய அமைதிக் கூட்டம் ஒன்றை அந்நகரில் நடத்துகின்றனர்.

"அதிக இளையோர், அதிக அமைதி" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மூன்று நாள் நிகழ்வுகளை, சான் எஜிதியோ அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

வன்முறை, அச்சம், தீவிரவாதம் ஆகியவற்றிற்கு 'இல்லை' என்று சொல்லவும், நட்பு, ஒப்புரவு, சந்திப்பு ஆகியவற்றிற்கு 'ஆம்' என்று சொல்லவும், இந்த இளையோர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அசிசி, கிரகோவ், உரோம், பெர்லின், ஆன்ட்வெர்ப், பாரிஸ் ஆகிய நகரங்களில் நடைபெற்ற அகில உலக இளையோர் அமைதிக் கூட்டங்களைத் தொடர்ந்து, பார்சலோனாவில் 7வது முறையாக இக்கூட்டம் நடைபெறுகிறது என்று, சான் எஜிதியோ அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.