2017-08-23 15:34:00

பாசமுள்ளப் பார்வையில்.... : ஈடு செய்யக்கூடியதா தாய்ப் பாசம்?


தனது வாழ்க்கையில், பொருளாதாரத்தில் உச்சகட்ட நிலைக்குச் சென்றுவிட்ட 50 வயது மனிதர் ஒருவர், தன் 80 வயது தாயைப் பார்த்து கேட்டார், ‘அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்’ என்று. தாய் வியப்புடன் மகனைப் பார்த்தார். ‘அதைப் பற்றி இப்ப என்ன? என்னுடைய கடமையைத்தானே செய்தேன். சரி… நீ தொடர்ந்து கேட்பதால் ஒன்று சொல்கிறேன். நீ குழந்தையாக இருந்தபோது எனது அருகில் படுத்து உறங்கினாயே, அதைப் போல இன்று ஒரு நாளைக்கு என்னுடன் படுத்து உறங்கு’  எனக் கூறினார் தாய்.

அன்றிரவு தனது தாயின் படுக்கையில் தாயுடன் படுத்துக்கொண்டார் மகன். தனது மகன் தூங்கி விட்டான் என்று அறிந்த தாய், எழுந்து சென்று ஒரு வாளியில் நீரை நிரப்பி கொண்டு வந்து தனது மகன் படுத்திருந்த இடத்தில் ஒரு குவளை தண்ணீரை வீசி நனைத்தார். தூக்கத்தில் தான் படுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் மறு பக்கத்திற்கு உருண்டு சென்று படுத்தார். அங்கே சென்று மகன் தூங்கியதும், இன்னொரு குவளை நீரை எடுத்து அவர் படுத்திருந்த இடத்தில் நீரை வீசி ஈரப்படுத்தினார்.  மீண்டும் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் கீழ்புறம் நோக்கி நகர முயன்றார். சிறிது நேரத்தில் அந்த இடமும் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன் தூக்கம் கலையவே, எழுந்து பார்க்கும்போது தனது தாய் தண்ணீர் குவளையுடன் இருப்பதைப் பார்த்து கோபமாக, ‘என்னம்மா செய்கிறாய்? தூங்க கூட  விடமாட்டேன் என்கிறாய்?  ஈரத்தில் தூங்க வேண்டுமென எப்படி எதிர்பார்க்கிறாய்?’ எனக் கேட்டார்.  அப்போது தாய் அமைதியாக சொன்னார், ‘மகனே...அம்மாவின் தியாகத்துக்கு ஈடுகட்ட திருப்பி ஏதாவது செய்ய வேண்டுமென நீ நினைக்கிறாய்.  நீ குழந்தையாக இருந்தபோது இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கையை நனைத்து விடுவாய். உடனே நான் எழுந்து உனக்கு உடையை மாற்றி ஈரமில்லாத இடத்தில் படுக்க வைத்துவிட்டு, நான் ஈரமான இடத்தில் படுத்துக்கொள்வேன். முடியுமானால் உன்னால் இந்த ஈரமான படுக்கையில் ஓர் இரவு தூங்க முடியுமா?  இது உன்னால் முடியுமென்றால் தாயின் தியாகத்திற்கு ஈடு கொடுத்ததாக எடுத்துக்கொள்கிறேன்’, என்று.

மகன் திகைத்து நின்றார். தாயின் தியாகத்திற்கு எந்த ஒரு மகனாலும் ஈடு செய்யமுடியாது என்பதே உண்மை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.