ஆக.19,2017. கீழை வழிபாட்டுமுறை தலத்திருஅவைகளுக்கு உதவும் நோக்கத்தில், திருப்பீடத்தில் உருவாக்கப்பட்ட கீழை வழிபாட்டுமுறை பேராயம் தனது நூறாம் ஆண்டை சிறப்பித்து வருகிறது.
அடக்குமுறைகளையும், அச்சுறுத்தல்களையும் தொடர்ந்து எதிர்கொண்டுவரும் பல கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளுக்கு, குறிப்பாக, உக்ரைன் கத்தோலிக்கத் திருஅவைக்கு, கீழை வழிபாட்டுமுறை பேராயம், தொடர்ந்து தனது ஆதரவைக் கொடுத்து வருகிறது.
திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்களால், 1917ம் ஆண்டு மே முதல் தேதியன்று, இரஷ்ய புரட்சிக்கு ஐந்து மாதங்களுக்குமுன், கீழை வழிபாட்டுமுறை பேராயம் உருவாக்கப்பட்டது.
எகிப்து, சீனாய் தீபகற்பம், எரிட்ரியா, வட எத்தியோப்பியா, தென் அல்பேனியா, பல்கேரியா, ருமேனியா, தென் இத்தாலி, சைப்ரஸ், கிரீஸ், ஹங்கேரி, இஸ்ரேல், ஈராக், ஈரான், இந்தியா, லெபனான், பாலஸ்தீனப் பகுதி, சிரியா, ஜோர்டான், துருக்கி, உக்ரைன் இரஷ்யா, போன்ற பகுதிகளிலுள்ள கீழை வழிபாட்டுமுறை தலத்திருஅவைகளுக்கு இப்பேராயம் உதவி வருகின்றது.
மேலும், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஆகஸ்ட் 21, வருகிற திங்களன்று, மாஸ்கோவுக்கு நான்கு நாள் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |