2017-08-14 16:05:00

பாசமுள்ள பார்வையில்.. ஆசைகளைத் தியாகம் செய்த தாய்


செல்லப்பா அவர்கள், மாற்றலாகிச் சென்றபிறகு, தன் ஊருக்குத் திரும்பி வந்தது, சென்ற மாதம் தற்செயலாய்தான் தெரியவந்தது கேசவனுக்கு. அப்போதிலிருந்தே அம்மாவிடம் அவர் பற்றிச் சொல்லலாமா, அவரை வீட்டுக்கு அழைக்கலாமா என்ற துடிப்பு கேசவனுக்கு. அம்மாவிடம் சொல்லலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கையில், அம்மா கடும் காய்ச்சலால் மருத்துவமனையில் சலனமின்றி படுத்துவிட்டார். எனவே செல்லப்பா அவர்களுக்கு, அம்மாவின் நிலையை விளக்கி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார் கேசவன். அன்று அம்மாவைப் பார்க்கச் சென்ற கேசவன், செல்லப்பா அவர்களை எதிர்பார்த்து, வாசலைப் பார்ப்பதும், அம்மாவின் முகத்தைப் பார்ப்பதுமாக இருந்தார். பின் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார் கேசவன். அவரின் கண்களில் கண்ணீர். அப்போது கேசவனுக்கு எட்டு வயது இருக்கும். ஒருநாள் அம்மா மகனை அணைத்தவாறு, ‘‘கேசவா, செல்லப்பா மாமாவை உனக்குப் பிடிச்சிருக்குதா?’’ என்று கேட்க, ‘ஓ… ரொம்பப் பிடிக்குமே!’’என்றான் கேசவன். எனக்கு… எனக்குக்கூட அவரைப் பிடிக்குதுடா கண்ணா! நல்ல மாமா அவரு. அவரை… அந்த நல்ல மாமாவை… உனக்கு அப்பாவாய்ப் பண்ணட்டுமா? என்று கேட்டார் அம்மா. சிறுவன் முகத்தில் ஒன்றும் புரியாத வெற்றுப்பார்வை. அது ஒரு தடை என்பதுபோல், அம்மாவின் முகத்தில் கணநேரத் தடுமாற்றம். என்னம்மா?’’ எனக் கேட்க, அவரை…நான் கல்யாணம் செய்துக்கட்டுமா?’’என்றார் அம்மா. ஹும், கூடாது, அது தப்பு!’’ உனக்கு ஒரு அப்பா கிடைப்பார்டா கண்ணா!’’ என்று அம்மா சொல்ல, என் அப்பா செத்துப்போய்ட்டார். நீ என் அம்மா, அம்மால்லாம் தப்புச் செய்யக்கூடாது…’என்று மறுப்பில் தலையாட்டினான் கேசவன். அந்தத் தலையாட்டலில் அம்மாவின் வாழ்க்கைக் கதவை இறுக மூடிப் பூட்டிவிட்டதை கேசவன் அன்று அறியவில்லை, ஆனால், இன்று அதை அறிந்து, உணர்ந்து, நொந்து, வெட்கி அதற்காகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். கேசவனின் இதயம் பேசியது. என் அம்மா என்பதற்குமேல் நினைக்கத் தெரியாத அந்தக் குழந்தையின் பேச்சை நீ ஏனம்மா கேட்டாய்? விதவை மறுமணம் தவறு என்று கருதும் ஒரு மரபுச் சமுதாயத்தின் வார்ப்படமான குழந்தையின் பேச்சை ஏன் கேட்டாய்? முதலில் ஒரு குழந்தையிடம் யோசனை கேட்பதே தவறில்லையா? குழந்தையைக் குழந்தையாகவே வைத்துவிட்டு உன் இதயம் காட்டிய வழியில் நீ சென்றிருந்தால் அந்தக் குழந்தை முதலில் முரண்டுபிடித்திருக்கும். ஆனால் வளர்ந்து ஆளானபின், அதைப் புரிந்து மகிழ்ந்திருக்கும். இரண்டு பேரின் மகிழ்வான வாய்ப்பைக் கெடுத்துவிட்ட குற்றச் சுமையை நெஞ்சில் தாங்கி இப்படி வருடக்கணக்காய் நான் பரிதவித்துக் கொண்டிருக்க மாட்டேன்.. என்றவாறு தனக்குள்ளே அழுதுகொண்டிருந்தார் கேசவன். இவரின் அம்மா முப்பது வயதில் கைம்பெண்ணானவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.