2017-08-14 16:36:00

காங்கோ குடியரசில் பசிச்சாவுகள் அபாயம்


ஆக.,14,2017. வன்முறைகளாலும், குடிபெயர்வுகளாலும் பாதிக்கப்பட்டுள்ள காங்கோ ஜனநாயக குடியரசில் 77 இலட்சம் பேர் பசியால் வாடுவதாக ஐநாவின்  அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனமும், உலக உணவு திட்ட நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அவசர கால உணவு உதவி தேவைப்படும் நிலையில் இருந்த மக்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் 59 இலட்சமாக இருந்தது, தற்போது 18 இலட்சம் அதிகரித்து, 77 இலட்சமாகியுள்ளது என தெரிவிக்கிறது.

கிராமப்புறங்களில் வாழும் மக்களுள் பத்திற்கு ஒருவர் பசியால் வாடும் நிலை இருப்பதாகக் கூறும் ஐ.நா.வின் FAO மற்றும் WFP நிறுவனங்கள், வயிற்றுப்போக்கு மற்றும் தட்டம்மை நோய்களின் பாதிப்பும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கின்றன.

குடிபெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பெண்களும் குழந்தைகளும், உணவு உதவிகளை சார்ந்து வாழும் நிலையில், விவசாயத்தை மீண்டும் துவக்கவேண்டிய தேவையும் உள்ளது என்கிறது இந்நிறுவனங்களின் அறிக்கை.

கடந்த ஓராண்டில் மட்டும் வன்முறைகளின் காரணமாக, காங்கோ குடியரசில் 14 இலட்சம் பேர் குடிபெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.