2017-08-11 15:28:00

மனித வர்த்தகத்திற்கு எதிராகப் பணியாற்றும் இந்திய அருள்சகோதரி


ஆக.11,2017. ஆப்ரிக்காவின் காமரூன் நாட்டில் மனித வர்த்தகத்திற்கு எதிராகப் பணியாற்றும் இந்திய அருள்சகோதரி ஒருவருக்கு, பன்னாட்டு நிறுவனம் ஒன்று விருது வழங்கி பாராட்டியுள்ளது.

அமலமரி மறைபோதக சபையைச் சார்ந்த, 39 வயது நிரம்பிய அருள்சகோதரி வனஜா ஜாஸ்பின் (Vanaja Jasphine) அவர்கள், கடந்த ஆண்டில் காமரூன் நாட்டின் வடமேற்குப் பகுதியில், 14 பெண்களை, மனித வர்த்தகத்திலிருந்து வீரத்துடன் மீட்டுவந்ததைப் பாராட்டும் விதமாக, இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

மனிதர், வர்த்தகம் செய்யப்படுவதற்கு எதிராகச் செயல்படும் அமெரிக்க ஐக்கிய நாட்டு அமைப்பு (TIP) ஒன்று, ஆண்டறிக்கை வெளியிட்ட நிகழ்வில், கடந்த ஆண்டில், இத்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய எட்டுப்பேரில் ஒருவராக, அருள்சகோதரி ஜாஸ்பின் அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.

காமரூன் நாட்டில், கும்போ மறைமாவட்டத்தின் நீதி மற்றும் அமைதி பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் அருள்சகோதரி ஜாஸ்பின் அவர்கள், போதைப்பொருளை ஊட்டி, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, பலவாறு துன்புறுத்தப்பட்ட 14 பெண்களை, கடந்த ஆண்டில் மீட்டுள்ளார் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.   

ஆதாரம் : DNA India / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.