2017-08-10 16:38:00

அருள்பணி Jacques Hamel அவர்களின் நினைவாக விருது


ஆக.10,2017. 2016ம் ஆண்டு, ஜூலை 26ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் Rouvray என்ற ஊரில், திருப்பலி நிறைவேற்றிய வேளையில் கழுத்து அறுபட்டு இறந்த அருள்பணி Jacques Hamel அவர்களின் நினைவாக, பிரான்ஸ் கத்தோலிக்க ஊடகம், விருது ஒன்றை அறிவித்துள்ளது.   

இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று தங்களையே அடையாளப்படுத்திக்கொண்ட இரு இளையோரால், கொல்லப்பட்ட அருள்பணி Hamel அவர்களின் நினைவாக நிறுவப்படும் இந்த விருது, அமைதி, பல்சமய உரையாடல் இவற்றை வளர்க்கும் ஊடக முயற்சிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதியையும், பலசமய உரையாடலையும் வளர்க்கும் வகையில், அச்சு வடிவு, வானொலி, மற்றும் தொலைக்காட்சி வழியே வெளியாகும் செய்திகளில் மிகச் சிறந்தவை, இந்த விருதுக்கு தெரிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர்கள் மற்றும் செய்தித் தொடர்பாளர்களின் பாதுகாவலர் என்று கருதப்படும் புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் அவர்களின் திருநாளான சனவரி 24ம் தேதியன்று, இவ்விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.