2017-08-08 15:14:00

சொல்லால், வாழ்வால் நற்செய்தியை அறிவித்தவர் புனித தோமினிக்


ஆக.08,2017. “நற்செய்திப் பணியில், தன் சொல்லாலும், வாழ்வாலும் போதித்த புனித தோமினிக் அவர்களுக்காக, இன்று இறைவனுக்கு மகிமையளிப்போம்” என,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.

புனித தோமினிக் என்ற சாமிநாதர் அவர்களின் விழாவான ஆகஸ்ட் 08, இச்செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், இப்புனிதர் ஆற்றிய நற்செய்திப்பணிக்காக இறைவனை மகிமைப்படுத்துவோம் எனக் கூறியுள்ளார்.

புனித தோமினிக் அவர்கள், 1170ம் ஆண்டில் இஸ்பெயின் நாட்டின் கலரோகா என்ற இடத்தில் பிறந்து, 1221ம் ஆண்டில் காலமானார். இவரது காலத்தில், ஆல்பிஜென்ஸ் தப்பறைக் கொள்கை வளர்ந்து வந்தது. உலகில் நன்மைக்கு ஒரு காரணகர்த்தா உண்டு. பருப்பொருள் என்பதனைத்தும், தீயவனுக்குரியது என்பதே அக்கொள்கை. இந்தத் தவறான கொள்கையின் அடிப்படையில், அக்கொள்கையைப் பின்பற்றியவர்கள், கிறிஸ்து மனிதஉரு எடுத்ததையும், அருளடையாளங்களையும் மறுத்தனர். மனித இன உற்பத்தியும் கூடாதென அவர்கள் வாதாடினர். புனித தோமினிக் அவர்கள், தன்  சொல்லாலும், வாழ்வாலும் இக்கொள்கையினர் மத்தியில் நற்செய்தி அறிவித்து, அவர்களை மனந்திருப்பினார். இந்த தன் பணிக்கு உதவியாக, 1215ம் ஆண்டில், போதகர்-துறவற (Order of Preachers O.P) என்ற சபையை நிறுவினார் புனித தோமினிக்.       

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.