2017-08-03 15:33:00

ஹாங்காங் புதிய ஆயர் : முதியோர் மதிப்புடன் வாழ்வதற்கு..


ஆக.03,2018. முதியோர் இன்னும் மதிப்புடன் வாழ்வதற்கு வழி செய்வதும், இளையோருக்கு நம்பிக்கையூட்டும் வழிகளைக் காட்டுவதும் தன் முக்கிய கடமைகள் என்று, ஹாங்காங் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் Michael Yeung அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆகஸ்ட் 1ம் தேதி, ஹாங்காங் ஆயராகப் பொறுப்பேற்ற Michael Yeung அவர்கள் செய்தியாளர்ளைச் சந்தித்தபோது, ஹாங்காங் பகுதியின் தன்னாட்சி, மனித உரிமைகள், சீன அரசுடன் உள்ள உரசல்கள் போன்ற கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன என்று ஆசிய செய்தி கூறுகிறது.

தனக்கு வழங்கப்பட்டுள்ள பணி, அரசியல் தொடர்புடையது அல்ல என்றும், தன் தலையாய கடமை, முதியோர் மற்றும் இளையோரைச் சார்ந்ததாக இருக்கும் என்றும் புதிய ஆயர் Yeung அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஹாங்காங்கில் உள்ள அனைத்து இளையோரும் அரசுக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால், அதே வேளையில், இளையோரின் குரலுக்கு அரசு செவி சாய்த்து, அவர்களின் உண்மையான ஏக்கங்களை நிறைவேற்ற வேண்டும் என்று, ஆயர் Yeung அவர்கள் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

அண்மையில் மரணமடைந்த மனித உரிமை ஆர்வலர் Liu Xiaobo அவர்களின் மரணம் தன்னை வருத்தமடையச் செய்தது என்பதை, ஆயர் Yeung அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டுப் பேசினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.