2017-08-03 14:36:00

பாசமுள்ள பார்வையில்.. வேதனைகளை உள்ளத்திலே புதைத்த தாய்


அந்தக் கிராமத்து தாய் பண்ணையார் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பள்ளிக்கூட வாசனை அறியாதவர். ஆனால் பக்தியும், பண்பும், ஞானமும் நிறைந்தவர். கடின உழைப்பாளி. தனது குடும்பத்தைவிட வசதி குறைந்த, குடும்பத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டார். தனி ஆளாய், தனது கடின மற்றும், அயராத உழைப்பால், புகுந்த வீட்டை தலைநிமிரச் செய்தார் அந்தத் தாய். வெகு காலமாகப் பயிரிடாமல் தரிசாகக் கிடந்த நிலங்களையெல்லாம் மீண்டும் விளைநிலமாக்கினார். கரம்பிடித்த கணவர், படித்தவராக இருந்தாலும், பண்பில் சிறந்தவர் எனச் சொல்வதற்கில்லை. ஆறு பிள்ளைகளுக்குத் தாயான அவர், தொடர்ந்து முதல் மூன்று பிள்ளைகளையும் இழந்தார். கடைசிக் குழந்தைப் பிறந்ததிலிருந்து, கணவர் கடின நோயால் தாக்கப்பட்டார். தனது சிறு பிள்ளைகளை, உறவினரின் பொறுப்பில் விட்டுவிட்டு, கணவரை, மதுரை, புதுக்கோட்டை என, மாதக்கணக்கில், மாறி மாறி சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். கிராமங்களுக்குப் பேருந்து வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், அந்தத் தாய், கணவரைக் காப்பாற்றுவதற்கு கடும் முயற்சிகள் எடுத்து, உயிர் பிழைக்கச் செய்தார். சேமித்த பணத்தையெல்லாம் கணவருக்காகச் செலவழித்தார். ஆனால் பிள்ளைகளின் படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஒரு கட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்து, திருமணமாகி, வெவ்வேறு நகரங்களில் குடியேறினர். தனது எழுபதாவது வயதில் கணவரை இழந்து, கிராமத்தில் தனியே வாழ்ந்த அந்தத் தாயை, அவரின் இரு மகன்களில் ஒருவர் மட்டுமே, நேரம் கிடைக்கும்போதெல்லாம், கிராமத்திற்குச் சென்று பார்த்து வந்தார். ஒரு கட்டத்தில், தாயை, தன்னோடு நகரத்திற்கு அழைத்துச் சென்றார் அந்த மகன். ஆனால், அங்குச் சென்ற ஓரிரு மாதங்களிலேயே, மகன் வீட்டில் ஏதோ பிரச்சனை, ஆனால் தாயினால் அல்ல. அதனால் வேறொரு நகரத்திலிருந்த உறவினர் ஒருவர் வீட்டிற்கு, சில மாதங்களுக்கென தாயை அனுப்பினார் மகன். ஆனால், அங்குச் சென்ற ஒரு மாதத்திலேயே, உறவினர் வீட்டார், அந்த அப்பாவித் தாய்க்கு, இரவு உணவில், நஞ்சு கலந்து கொடுத்து, மூச்சை அடக்கிவிட்டனர். இந்தத் தாய், கணவரால் அனுபவித்த மன வேதனைகள் சொல்லும் தரமன்று. அனைத்தையும், வெளியில் காட்டிக்கொள்ளாமல், பொறுமையோடு அனுபவித்தார். அதிர்ந்து பேசாதவர், புறணிகள் பேசுவதை முற்றிலும் தவிர்த்தவர். தனது குட்டி மகளிடம், அம்மாவுக்கு இவ்வளவு துன்பங்கள் போதாது, இன்னும் துன்பங்கள் வேண்டும், ஆயினும், அம்மாவுக்குப் பொறுமை வேண்டும் என, நீ, கடவுளிடம் கேள் எனச் சொல்வார். மனவலிகள் அத்தனையையும், முணுமுணுக்காமல் பொறுமையோடு ஏற்றவர் இந்தத் தாய்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.