2017-07-29 14:50:00

இயேசுவையும் அவரின் நற்செய்தியையும் தினமும் அறிவியுங்கள்


ஜூலை,29,2017. ஒவ்வொரு நாளும் ஆற்றும் செயல்களில், இயேசுவையும் அவரின் நற்செய்தியையும் அறிவியுங்கள் என, மணிலா பேராயர் கர்தினால் அந்தோனியோ லூயிஸ் தாக்லே அவர்கள், பிலிப்பீன்ஸ் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிலிப்பீன்சில் இவ்வாண்டில் சிறப்பிக்கப்படும் பங்குத்தள ஆண்டின் ஒருபகுதியாக, மணிலாவில் நடைபெற்ற, நற்செய்தியை புதிய வழியில் அறிவிப்பது குறித்த நான்காவது கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் தாக்லே அவர்கள், இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

ஒரே இதயமும், ஒரே மனமும் என்ற தலைப்பில், ஜூலை 28, இவ்வெள்ளியன்று தொடங்கிய இக்கருத்தரங்கில், ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், பொதுநிலையினர் என, ஆறாயிரத்திற்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். இக்கருத்தரங்கு, இஞ்ஞாயிறன்று நிறைவடையும்.

திருஅவையின் முதல் கிறிஸ்தவர்கள் போன்று, பிலிப்பீன்ஸ் மக்களும், ஒரே இதயமும், ஒரே மனமும் கொண்டவர்களாகச் செயல்படுமாறும், தங்களின் அன்றாட வாழ்வில், நற்செய்தியை அறிவிக்குமாறும் வலியுறுத்தினார், கர்தினால் தாக்லே. 

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.