2017-07-27 15:13:00

குறிக்கோளுடன் வாழ்ந்தவர், திருத்தூதரான புனித யாக்கோபு


ஜூலை,27,2017. இயேசு கிறிஸ்துவின் தனித்துவத்தை உலகறியச் செய்வதை தன் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர், திருத்தூதரான புனித யாக்கோபு என்று மத்ரித் பேராயரான கர்தினால் கார்லோஸ் ஒஸோரோ (Carlos Osoro) அவர்கள் கூறினார்.

ஸ்பெயின் நாட்டின் பாதுகாவலரான புனித யாக்கோபு திருநாள், ஜூலை 25, கடந்த செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி,  ACI Prensa என்ற கத்தோலிக்க செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியொன்றில், கர்தினால் ஒஸோரோ அவர்கள் இவ்வாறு கூறினார்.

இத்திருநாளையொட்டி, உலகப் புகழ்பெற்ற Santiago de Compostelaவுக்கு பக்தர்கள் மேற்கொள்ளும் திருப்பயணங்களைப் பற்றி குறிப்பிட்டுப்பேசிய கர்தினால் ஒஸோரோ அவர்கள், திருப்பயணங்களுக்கு முற்றிலும் எதிராக, குறிக்கோளின்றி பயணிக்கும் ஆபத்து ஐரோப்பியர்களைச் சூழ்ந்துள்ளது என்பதைக் குறித்தும் எச்சரித்தார்.

ஸ்பெயின் நாட்டில் வாழ்வோர், தங்களிடையே நிலவும் வேறுபாடுகளில் கவனம் செலுத்தாமல், திருத்தூதர்கள் வழியே நாம் பெற்ற விசுவாசம் நம்மை ஒருங்கிணைக்கிறது என்ற மேலான கொள்கையில் கவனம் செலுத்தும்படி, கர்தினால் ஒஸோரோ அவர்கள் தன் பெட்டியில் விண்ணப்பித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.