ஜூலை,26,2017. புனிதரான பாத்ரே பியோ அவர்களின் திருத்தலமான ஜியோவான்னி ரொத்தோந்தோவில் நடைபெற்றுவரும் யூபிலி ஆண்டின் நிறைவுத் திருப்பலியை, ஜூலை 28, இவ்வெள்ளியன்று, கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ அவர்கள் நிறைவேற்றுவார் என்று இத்திருத்தலம் அறிவித்துள்ளது.
பாத்ரே பியோ அவர்கள், 1916ம் ஆண்டு, ஜியோவான்னி ரொத்தோந்தோவுக்கு வருகை தந்ததன் 100ம் ஆண்டு நிறைவு, கடந்த ஓராண்டளவாக சிறப்பிக்கப்பட்டு வருவதையடுத்து, இந்த யூபிலி ஆண்டின் நிறைவுத் திருப்பலியை, புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் அமாத்தோ அவர்கள் நிறைவேற்றுகிறார்.
இந்த நூற்றாண்டின் நினைவாக, இந்நகரில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு நினைவுச் சின்னம், ஜூலை 28ம் தேதி திறந்துவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1887ம் ஆண்டு பிறந்த பாத்ரே பியோ அவர்கள், 1916ம் ஆண்டு, ஜியோவான்னி ரொத்தோந்தோவில், ஓர் அருள்பணியாளராக தன் பணிகளைத் துவக்கி, அதே நகரில், 1968ம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.
1918ம் ஆண்டு முதல், இயேசுவின் திருக்காயங்களை தன் உடலில் தாங்கிய, பிரான்சிஸ்கன் துறவியான பாத்ரே பியோ அவர்களை, 2002ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள் புனிதராக உயர்த்தினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |