2017-07-19 17:06:00

வெனிசுவேலா மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம்


ஜூலை,19,2017. வெனிசுவேலா மக்கள், அந்நாட்டில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில், அமைதியான முறையில் பங்கேற்றுவந்த வேளையில், அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், கண்டனத்திற்குரியன என்று, அந்நாட்டு கர்தினால், ஹோர்கே உரோசா சவினோ (Jorge Urosa Savino) அவர்கள் கூறியுள்ளார்.

ஜூலை 16, கடந்த ஞாயிறன்று, வெனிசுவேலா நாட்டின் எதிர் கட்சிகள் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், தற்போதைய அரசு அந்நாட்டு பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு எடுத்துவரும் முயற்சிகளுக்கு எதிரான கருத்துக்களை, அந்நாட்டின் 98.4 விழுக்காட்டு மக்கள் தெரிவித்தனர் என்று பீதேஸ் (Fides) செய்தி கூறியுள்ளது.

கடந்த ஞாயிறன்று கொண்டாடப்பட்ட கார்மேல் அன்னை திருநாளை, கர்தினால் சவினோ அவர்கள் கார்மேல் அன்னை பங்குத்தளத்தில் சிறப்பிக்கச் சென்றிருந்த வேளையில், இந்த கருத்துக்கணிப்பு நடந்த இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் எதிரொலியாக, இக்கோவிலும் தாக்கப்பட்டு, அங்கிருந்தோர் வெளியில் செல்லாமல் இருக்கும்படி வைக்கப்பட்டிருந்தனர்.

இத்தாக்குதலைக் கண்டனம் செய்த கர்தினால் சவினோ அவர்கள், காவல்துறையினரிடம் விண்ணப்பித்ததால், கோவிலில் இருந்த மக்கள் சில மணி நேரங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டனர் என்றும், கர்தினால் அவர்கள் இறுதியாக அக்கோவிலைவிட்டு வெளியேறினார் என்றும் பீதேஸ் செய்தி மேலும் கூறுகிறது.

ஜூலை 16ம் தேதி, வெனிசுவேலா நாட்டில் நடைபெற்ற கருத்துக்கணிப்பு அமைதியான முறையில் நடைபெறும்படி செபிக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞாயிறு மூவேளை செப உரையில் மக்களிடம் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெனிசுவேலா நாட்டில் நிலவிவரும் நெருக்கடியான சூழலால், மருத்துவ உதவிகள் இன்றி, 2016ம் ஆண்டு, அந்நாட்டில் 11,000 குழந்தைகள் இறந்துள்ளனர் என்றும், அங்குள்ள உணவு, மற்றும் மருந்துகள் பற்றாக்குறையைப் போக்க, இத்தாலிய ஆயர் பேரவை, அண்மையில் 5இலட்சம் யூரோக்கள் நிதி உதவி வழங்கியுள்ளது என்றும் இத்தாலிய காரித்தாஸ் அமைப்பு கூறியுள்ளது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.