2017-07-10 15:53:00

கடல் தொழிலாளர்களின் சிரமங்களையும் தியாகங்களையும் உணர்வோம்


ஜூலை,10,2017. கடல் கடந்து பொருட்களை நாடுகளுக்கிடையே எடுத்துச்செல்வதன் வழியாக, உலக மக்களின் வாழ்வை எளிதாக்கும் கடல் பணியாளர்களின் தியாகம் மற்றும் கடின உழைப்பிற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும் என  அழைப்பு விடுத்துள்ளார், திருப்பீட உயர் அதிகாரி, கர்தினால் பீட்டர் டர்க்சன்.

இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட உலக கடல் தினத்தையொட்டி செய்தி வெளியிட்ட, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் டர்க்சன் அவர்கள், கடல் தாண்டி உலகில் எடுத்துச் செல்லப்படும் பொருட்களுள் 90 விழுக்காடு கப்பல்கள் வழியாகவேச் செல்கின்றன என்பதன் அடிப்படையில், இப்பணியில் ஈடுபடுவோர் குறித்து நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும் என கூறியுள்ளார்.

உலக பொருளாதாரத்திற்கு குறிப்பிட்ட பங்கை ஆற்றினாலும், கடலில் தொழில் புரிவோரின் வாழ்வு துன்பம் நிறைந்ததாக உள்ளது என்பதை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், தங்கள் குடும்பங்களிலிருந்து இவர்கள் பிரிந்திருப்பது, தனிமையுணர்வு, பாதுகாப்பு காரணங்களுக்காக கரைகளில் சந்திக்கும் தடைகள், என்பனவற்றைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில இடங்களில் பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி, மேய்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர் கூட இவர்களை சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பதையும், பயங்கரவாதிகளால் இவர்கள் சந்திக்கும் துன்பங்களையும், தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், கடலில் பணிபுரிவோர் பலர் சுரண்டப்படுவது மற்றும் அவர்களின் உரிமைகள் மீறப்படுவது குறித்த கவலையையும் வெளியிட்டுள்ளார்.

மனிதர்கள் கடல் வழியாக வியாபாரப் பொருட்களாக கடத்திச் செல்லப்படல், கட்டாயமாக வேலை வாங்கப்படல் போன்றவை குறித்தும் தன் செய்தியில் தெரிவித்துள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், கடல் தொழிலாளர்களுக்கென அவர் உருவைக்கியுள்ள ஒரு செபத்தையும் அச்செய்தியின் இறுதியில் பகிர்ந்துள்ளார். 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.