2017-07-08 16:04:00

ஆசிய இளையோர் தினம் பல்சமய உலகைக் கண்டுணர வாய்ப்பு


ஜூலை,08,2017. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள இந்தோனேசியாவில், கத்தோலிக்க இளையோர் எவ்வாறு தங்கள் விசுவாசத்தை வாழ்கின்றனர் என்பதைக் கண்டுணர, ஆசிய இளையோர் தினம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இம்மாதம் 30ம் தேதி முதல், ஆகஸ்ட் 6ம் தேதி வரை, இந்தோனேசியாவின் யோககார்த்தாவில் நடைபெறவிருக்கும் 7வது ஆசிய இளையோர் தினத்தில் கலந்துகொள்ளும், பிலிப்பீன்ஸ் இளையோர் பற்றி ஆசியச் செய்தியிடம் பேசிய, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் இளையோர் பணிக்குழு அதிகாரி ஸ்டீபன் போர்ஹா அவர்கள், இவ்வாறு கூறினார்.

இந்த ஆசிய இளையோர் தினத்தில் கலந்துகொள்வதன் வழியாக, பிலிப்பீன்ஸ் இளையோர் பிரதிநிதிகள், தங்களின் விசுவாசத்தை மேலும் உறுதிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார், ஸ்டீபன் போர்ஹா.

ஆசியாவின் பல்வேறு நாடுகளிலிருந்து, ஆயிரக்கணக்கான இளையோர், தங்களின் ஆன்ம வழிகாட்டிகள் மற்றும் ஆயர்களுடன், இதில் கலந்துகொள்ளவுள்ளனர். மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆசிய இளையோர் நாள் சிறப்பிக்கப்படுகின்றது.  

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.