2017-06-24 15:12:00

செப்.6-11,2017 கொலம்பியத் திருத்தூதுப் பயண விவரங்கள்


ஜூன்,24,2017. வருகிற செப்டம்பர் 6ம் தேதி முதல் 11ம் தேதிவரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொலம்பியாவில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.

செப்டம்பர் 6, புதன்கிழமை, முற்பகல் 11 மணிக்கு, உரோம் ஃபியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்று கொலம்பிய நேரம் மாலை 4.30 மணிக்கு, தலைநகர் போகோட்டா இராணுவ விமான நிலையம் சென்று, வரவேற்பு நிகழ்வுகளில் கலந்துகொள்வார்.

செப்டம்பர் 7ம் தேதியன்று, போகோட்டாவில், அரசு அதிகாரிகள் சந்திப்பு, அரசுத்தலைவர் சந்திப்பு, அந்நகர் பேராலயம் சென்று விசுவாசிகளை ஆசீர்வதித்தல், ஆயர்கள் சந்திப்பு, மாலையில், சைமன் பொலிவார் பூங்காவில் திருப்பலி ஆகிய நிகழ்வுகளில் கலந்துகொள்வார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 8ம் தேதியன்று, போகோட்டாவிலிருந்து Villavicencio சென்று, CATAMAவில் திருப்பலி, மாலையில், தேசிய ஒப்புரவு திருவழிபாடு, ஒப்புரவு சிலுவைமுன் செபித்தல் ஆகிய நிகழ்வுகளை நிறைவுசெய்து, மீண்டும் போகோட்டா செல்வார் திருத்தந்தை.

செப்டம்பர் 9ம் தேதியன்று, மெடெலின் சென்று திருப்பலி நிறைவேற்றல், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும், குருத்துவமாணவரைச் சந்தித்தல் போன்ற பயணத் திட்டங்களை நிறைவேற்றி, 10ம் தேதி ஞாயிறன்று, கார்த்தஜேனா சென்று, வீடற்றவர்களுக்கென அமைக்கப்படவிருக்கும் இல்லத்தின் அடிக்கல்லை ஆசீர்வதிப்பார் திருத்தந்தை. அதே நாளில், புனித பீட்டர் கிளேவர் ஆலயத்தையும் தரிசிப்பார் திருத்தந்தை.   

கார்த்தஜேனா நகரில் திருப்பலி நிறைவேற்றி, செப்டம்பர் 10ம் தேதி மாலை 6.45 மணிக்கு, உரோம் நகருக்குப் புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 11ம் தேதி பகல் 12.40 மணிக்கு உரோம் வந்து சேர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.