2017-06-23 16:10:00

இரமதான் மாத நிறைவுக்கு மிலான் கர்தினால் செய்தி


ஜூன்,23,2017. இரமதான் மாத நிறைவையொட்டி, உலகின் முஸ்லிம் சகோதரர்க்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், இத்தாலியின் மிலான் பேராயர், கர்தினால் ஆஞ்சலோ ஸ்கோலா.

இந்நிகழ்வுக்கென கர்தினால் ஸ்கோலா அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நன்மை செய்வதில் முந்திக்கொள்ளுங்கள் என்றும், உடன்பிறப்புகள் போன்று, ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்புகாட்டுங்கள் (உரோ. 12,10)என்றும் கூறியுள்ளார்.

கடவுள் நம்மில் விதைத்துள்ள கொடைகளை, ஒருவர் ஒருவரிடம் பலனுள்ளதாக ஆக்குவதற்குரிய, வழிகளைத் தேடுமாறு, நம் விசுவாசம் நமக்கு அழைப்பு விடுக்கின்றது எனவும் கர்தினாலின் செய்தி கூறுகின்றது.

வன்முறை, போர்கள், பஞ்சம், குடியேற்றம், சுற்றுச்சூழல்கேடு, மனக்கவலை, நம்பிக்கையிழப்பு, கடவுளோடு உறவை இழந்தநிலை ஆகியவற்றால் ஏற்பட்ட எதிர்விளைவுகளைக் குணப்படுத்தி, வாழ்வைச் சீரமைக்க, இந்த இரமதான் மாதம், கனிகளை அளித்துள்ளது எனவும் கர்தினாலின் செய்தி முஸ்லிம்களுக்கு நினைவுபடுத்தியுள்ளது. தனது உயர்மறைமாவட்டத்தில், முஸ்லிம்களுடன் உரையாடலை வளர்க்குமாறும், மிலான் கர்தினால் ஊக்குவித்துள்ளார்.

இந்தியாவில் இரமதான் மாதம், ஜூன் 24, இச்சனிக்கிழமை மாலையில் நிறைவடைகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.