2017-06-22 16:03:00

காங்கோ அமைதிக்கு திருப்பீடத்தின் புதிய பரிந்துரைகள்


ஜூன்,22,2017. காங்கோ குடியரசில் பொதுமக்களுக்கு எதிராகவும், மத நிறுவனங்களுக்கு எதிராகவும் இடம்பெற்றுவரும் தாக்குதல்கள் குறித்து, திருஅவை மிகுந்த கவலை கொண்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் அவையில் எடுத்துரைத்தார், திருப்பீட பிரதிநிதி, பேராயர் இவான் யுர்க்கோவிச்.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் அவையின் 35 வது கூட்டத்தில் உரையாற்றிய, ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீடப் பிரதிதிநிதி, பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், காங்கோ குடியரசில் அமைதியை நிலைநாட்ட ஐந்து பரிந்துரைகளை முன்மொழிந்தார்.

போர் நிறுத்தம் அமலுக்குக் கொணரப்பட்டு, வன்முறைகளும், ஆயுதப் பரிமாற்றங்களும் நிறுத்தப்படவேண்டும் என்பதை, முதல் பரிந்துரையாக முன்வைத்த பேராயர், பொதுமக்களும் உதவிப் பணியாளர்களும் பாதுகாக்கப்படவேண்டும் என்பது உறுதிச்செய்யப்பட வேண்டும் என்பதை, தன் இரண்டாவது பரிந்துரையாக வைத்தார்.,

மேலும், ஒப்புரவு, கலந்துரையாடல்கள், அமைதியைக் கட்டியெழுப்புதல் போன்றவைகளில் கவனம் செலுத்தலையும் வலியுறுத்திய திருப்பீடப் பிரதிநிதி, எப்பக்கமும் சாராத நடுநிலைக் குழுவை அமைத்து, சனநாயக வழிகளை ஊக்குவித்தல் என்பதையும், நாட்டைவிட்டு வெளியேறியுள்ளோர் மீண்டும் நாட்டிற்குள் குடிபெயர பாதுகாப்பான வழிமுறைகள அமைத்துத்தர வேண்டும் என்பதையும் முன்மொழிந்தார்.

காங்கோ குடியரசு மக்களின், மற்றும், குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதே, அனைத்து முயற்சிகளின் நோக்கமாக இருக்க வேண்டும் எனவும், எடுத்துரைத்தார் பேராயர் யுர்க்கோவிச்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.