புனித அன்னை தெரேசா, கொல்கத்தாவில் வாழ்ந்த காலத்தில், ஒரு நாள், ஒரு பையில் அரிசி எடுத்துக்கொண்டு, ஓர் ஏழைப் பெண்ணின் இல்லத்திற்குச் சென்றார். அப்பெண்ணும் அவரது குழந்தைகளும் பல நாட்களாக பட்டினியால் துன்புற்றனர் என்பதை, அன்னை அவர்கள் அறிந்திருந்ததால், அவரைத் தேடிச் சென்றார்.
அன்னை அவர்கள் கொண்டுவந்த அரிசியை நன்றியோடு பெற்றுக்கொண்ட அப்பெண், அடுத்து செய்தது, அன்னை தெரேசா அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. தான் பெற்ற அரிசியை, அப்பெண், இரு பங்காகப் பிரித்தார். ஒரு பங்கை தன் வீட்டில் வைத்துவிட்டு, மற்றொரு பங்கை, தன் வீட்டுக்கு அருகில் வாழ்ந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டுத் திரும்பினார். அன்னை அவரிடம் காரணம் கேட்டபோது, அப்பெண், "அன்னையே, நீங்கள் தந்த அரிசியில் பாதிப் பங்கைக் கொண்டு எங்களால் சமாளிக்கமுடியும். ஆனால், அடுத்த வீட்டிலோ அதிகக் குழந்தைகள் உள்ளனர். அவர்களும், பல நாட்கள் பட்டினியால் துன்புறுகின்றனர் என்பது எனக்குத் தெரியும்" என்று பதில் சொன்னார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |