2017-06-15 16:35:00

அகில உலக அமைதி நாளுக்கு 100 நாள்கள்


ஜூன்,15,2017. உறவுப் பாலங்களைக் கட்டுவதிலும், பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடுவதிலும், மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதிலும் உண்மையான அமைதியை உலகில் கொண்டுவர முடியும் என்று, ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

செப்டம்பர் 21ம் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும் அகில உலக அமைதி நாளுக்கு 100 நாள்கள் முன்னதாக, ஜூன் 14ம் தேதி, இப்புதனன்று, கூட்டேரஸ் அவர்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளார்.

'அனைத்திற்கும் மேலாக அமைதியை முன்னிறுத்துங்கள்' என்ற விண்ணப்பத்துடன் இந்த 100 நாள் முயற்சியைத் துவக்கிய கூட்டேரஸ் அவர்கள், ஆயுதம் தாங்கிய மோதல்களால் இவ்வுலகம் அவசியமில்லாத வேதனைகளைச் சந்தித்து வருகிறது என்று கூறினார்.

'அமைதிக்கென இணைவோம்: அனைவருக்கும் மதிப்பு, பாதுகாப்பு மற்றும் மாண்பு' என்பது, இவ்வாண்டு சிறப்பிக்கப்படவிருக்கும் அகில உலக அமைதி நாளின் மையக்கருத்தாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்துவரும் 100 நாள்களில், உலகெங்கும் துன்புறும் புலம்பெயர்ந்தோர் மீது தனி கவனம் செலுத்துமாறு, ஐ.நா. பொதுச்செயலர், கூட்டேரஸ் அவர்கள், சிறப்பாக விண்ணப்பித்துள்ளார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.