2017-06-14 15:41:00

திருத்தந்தை பிரான்சிஸ் சுற்றுச்சூழலுக்காக குரல்கொடுப்பவர்


ஜூன்,14,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக, உரத்து குரல்கொடுப்பவர் என்று, கானடா நாட்டு அமைச்சர் ஒருவர், இப்புதனன்று வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் பாராட்டினார்.

இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் கலந்துகொண்டு திருத்தந்தையைச் சந்தித்துப் பேசிய, கானடா நாட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் Catherine McKenna அவர்கள், இவ்வாறு கூறினார்.

திருஅவைக்கு அர்ப்பணம், காலநிலை மாற்றம் போன்ற விவகாரங்களில்  திருத்தந்தையின் நிலைப்பாடு குறித்து, வத்திக்கான் வானொலி செய்தியாளர் ஒருவரிடம் பேசிய கானடா அமைச்சர் McKenna அவர்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து, உலகெங்கிலுமுள்ள கத்தோலிக்கரை மிகச் சிறப்பாகவே திருத்தந்தை ஊக்குவித்து வருகிறார் எனத் தெரிவித்தார்.

இத்தாலியின் பொலோஞ்ஞா நகரில் நடைபெறும் G7 நாடுகளின் சுற்றுச்சூழல் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இத்தாலி வந்துள்ள அமைச்சர் McKenna அவர்கள், புலம்பெயர்தல் மற்றும், காலநிலை மாற்றம் குறித்த, வத்திக்கான் கருத்தரங்கிலும் கலந்துகொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.