2017-06-12 15:59:00

பாசமுள்ள பார்வையில்.. அன்னை ஒரு பல்கலைக்கழகம்


ஒரு பிள்ளைக்கு அன்னை மடியே முதல் பள்ளிக்கூடம் என்பார்கள். ஒருநாள் அந்தச் சிறுவன், தனது ஊர் மாமரத்தடியில், சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருக்கையில் வேகமாக காற்று வீசியது. அதனால் அந்த மரத்தில் பழுத்த பழங்கள் கீழே விழுந்தன. எல்லாச் சிறுவர்களும் அவற்றை எடுத்தது போலவே, அந்தச் சிறுவனும் அவற்றில் சிலவற்றை எடுத்து வீட்டுக்கு கொண்டுவந்து, தாயிடம் காட்டினான். அப்போது அந்தத் தாய், ‘மத்தவங்க தோட்டத்து மாங்காய், தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாதுடா’ என அவற்றை அங்கேயே போட்டுவிடுமாறு கூறியிருக்கிறார். உடனே அச்சிறுவன், ‘எல்லாப்பசங்களும்தான் எடுத்துட்டுப் போனாங்க., யாரும் பார்க்கலம்மா..!’ எனக் கூறியபோது, ‘உனக்கானது எதுவோ அதை மட்டும்தான் நீ அனுபவிக்க வேண்டும், எல்லாரும் செய்கிறார்கள் என்பதால், ஒரு தவறு ஒருபோதும் சரியாகி விடாது’ என்று சொல்லி, மகனின் தவறை, அவன் மனதில் ஆழமாய்ப் பதிய வைத்திருக்கிறார் அத்தாய். சிறுவயதில் அன்று கேட்ட தன் தாயின் வார்த்தைகளை, இன்றுவரை மந்திரம் போல் எண்ணி செயல்பட்டுக் கொண்டிருப்பவர், தமிழக IAS அதிகாரி உ.சகாயம் அவர்கள். இவர் தன் வாழ்வு பற்றிக் கூறுகையில், ‘நான் என் நேர்மைக் குணத்தை என் தாயின் மடியிலிருந்தே கற்றேன், என் தாயின் தூய வளர்ப்பின் வெளிப்பாடே, இப்போது நான்’ எனக் கூறியுள்ளார்.

சகாயம் அவர்களின் அன்னை திருமதி சவரியம்மாள் அவர்கள் போன்று, எத்தனையோ தாய்மார், தன் பிள்ளைகளுக்கு அமுதோடு அளப்பரிய நேர்மையையும், அறநெறிகளையும் ஊட்டி வளர்த்து வருகின்றனர். அன்னையர் புகட்டும் நல்வழிகளை, பிள்ளைகள் தொடர்ந்து தங்கள் வாழ்வில் கடைப்பிடித்தால், சமுதாயத்தில் பல சகாயங்கள் உருவாவர் என்பதில் சந்தேகமில்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.