ஜூன்,12,2017. உலகில் 5வயதுக்கும் 14க்கும் இடைப்பட்டச் சிறார்களில் ஏறத்தாழ 15 கோடி பேர் குழந்தைத் தொழிலாளர்களாக இருப்பதாக, குழந்தைகளுக்கான அவசரகால நிதி அமைப்பான யுனிசெஃப் அறிவித்துள்ளது.
இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட, குழந்தைத் தொழிலை எதிர்க்கும் உலக நாளையொட்டி யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் 15 கோடி சிறார், அதாவது, 4 குழந்தைகளுக்கு ஒருவர், குழந்தைத் தொழிலாளர்களாக துன்புறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஹாராவை அடுத்த ஆப்ரிக்க நாடுகளிலேயே குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் இருப்பதாகக் கூறும் இவ்வமைப்பு, உலகின் மொத்த குழந்தைத் தொழிலாளர்களுள் 28 விழுக்காட்டினர், இந்நாடுகளிலேயே இருப்பதாகவும், சிறார்களுள், பெண் குழந்தைகள் அதிக அளவில் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதால், அவர்களின் கல்வி பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் இவ்வறிக்கை மேலும் கூறியுள்ளது.
முன்னாள் குழந்தை இராணுவ வீரர்கள், தெருவாழ் சிறார்கள் போன்றோரை மீட்டு, அவர்களுக்குக் கல்வி வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது, யுனிசெஃப் அமைப்பு.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |