2017-06-07 16:36:00

'எக்ஸ்போ 2017: எதிர்கால சக்தி' கண்காட்சியில் திருப்பீடம்


ஜூன்,07,2017. கசக்ஸ்தான் நாட்டின் தலைநகர் அஸ்தானாவில் நடைபெறும் 'எக்ஸ்போ 2017' என்ற தொழில் துறை கண்காட்சி நிகழ்வில், திருப்பீடத்தின் பிரதிநிதியாக கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் பங்கேற்பார் என்று ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை அறிவித்துள்ளது.

'எக்ஸ்போ 2017: எதிர்கால சக்தி' என்ற தொழில் துறை கண்காட்சியின் துவக்க விழா, ஜூன் 8ம் தேதி முதல் 11ம் தேதி முடிய நிகழும் என்றும், அவ்வேளையில், திருப்பீடத்தின் சார்பில் அங்கு நிறுவப்பட்டிருக்கும் ஓர் அரங்கத்தை கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் திறந்துவைப்பார் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.

1851ம் ஆண்டு முதல், பன்னாட்டு கண்காட்சிகளில் திருப்பீடமும் பங்கேற்று வருகிறது என்றும், 'எக்ஸ்போ 2017' கண்காட்சியில் திருப்பீடத்தின் சார்பில் நிறுவப்படும் அரங்கம், "பொது நலனுக்காக சக்தி: நமது பொதுவான இல்லத்தைப் பேணுதல்" என்பதை மையக் கருத்தாகக் கொண்டிருக்கும் என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜூன் 9ம் தேதி நடைபெறும் இவ்வரங்கத்தின் திறப்பு விழாவில் கர்தினால் டர்க்சன் அவர்களுடன், கசக்ஸ்தானில் பணியாற்றும் திருப்பீட தூதர், பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் அவர்களும் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.