2017-06-05 16:01:00

கிறிஸ்தவ விசுவாசத்தின் இதயமாக மறைபரப்புப்பணி


ஜூன்,05,2017. தன் அல்லேலூயா வாழ்த்தொலி  செப உரையில், இவ்வாண்டிற்கான உலக மறைபரப்பு தினச் செய்தியை,  தூய ஆவியார் பெருவிழாவன்று வெளியிடுவதாக அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'கிறிஸ்தவ விசுவாசத்தின் இதயமாக மறைபரப்புப்பணி உள்ளது' என்பது அக்டோபரில் சிறப்பிக்கப்படும் உலக மறைபரப்பு தினத்தின் தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக முழுமைக்கும் மறைபரப்புப் பணியை ஆற்றிவரும் திருஅவைக்கு, தூய அவியார் பலத்தை வழங்குவாராக எனவும் கூறினார்.

உலகிற்கு அமைதியை வழங்கும் தூய ஆவியானவரே, போர் மற்றும் பயங்கரவாதங்களின் காயங்களை குணப்படுத்துகிறார் எனவும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனியன்று இரவு, இலண்டனில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர், மற்றும், காயமடைந்தோருக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் செபிப்போம் எனவும் கேட்டுக்கொண்டார்.

தூய ஆவியார் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு, தங்கள் 50 ஆண்டு நிறைவைச் சிறப்பித்த  அருங்கொடை இயக்கத்தினருக்கும், பிற கிறிஸ்தவ சபைகளின் அங்கத்தினர்களுக்கும் தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.