2017-05-30 14:11:00

பாசமுள்ள பார்வையில்: துன்புறும் அன்னையரைச் சந்திக்கும் மரியா


மே 31, கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தத் திருநாள். "மரியா புறப்பட்டு யூதேயா மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்" (லூக்கா 1: 39) என்று இத்திருநாளின் நற்செய்தி ஆரம்பமாகிறது. தேவையில் இருந்த தன் உறவினர் எலிசபெத்தை, அன்று தேடிச்சென்ற மரியா, இன்றும், தேவையில் இருப்போரைத் தேடி வருகிறார்.

தன் கருவிலும், கரங்களிலும் குழந்தை இயேசுவைத் தாங்கியவண்ணம், மரியன்னை மேற்கொண்ட பயணங்கள் கடினமானவை. கருவில் இயேசு உருவான அத்தருணமே, உறவினரான எலிசபெத்தைச் சந்திக்க, யூதேயா மலைப்பகுதியில் பயணமானார். தன் பேறுகாலம் நெருங்கிய வேளையில், பெத்லகேம் என்ற ஊருக்கு கடினமானதொரு பயணம் மேற்கொண்டார். இயேசுவின் உயிரைக் காப்பாற்ற, பச்சிளம் குழந்தையைச் சுமந்தவண்ணம், இரவோடிரவாக எகிப்துக்குத் தப்பித்துச் சென்றார். எருசலேமில் விழா கொண்டாடச் சென்றவர், அங்கு சிறுவன் இயேசு தொலைந்துபோனதை அறிந்து, மீண்டும், பதைபதைப்புடன் அவரைத் தேடி, எருசலேமுக்குச் சென்றார். இறுதியாக, தன் மகன் சிலுவை சுமந்து சென்றபோது, அவருடன் அச்சிலுவைப்பாதை பயணத்திலும் பங்கேற்றார். அன்னை மரியா மேற்கொண்ட இந்த துயரமான பயணங்களை, இன்றும், ஆயிரமாயிரம் அன்னையர் மேற்கொள்கின்றனர்.

நெருக்கடியானச் சூழல்களிலும், கருவில் வளரும் குழந்தையைக் கலைத்துவிடாமல் வாழும் அன்னையரை நினைவில் கொள்ள...

பிறந்தநாளன்றே, பச்சிளம் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு, புலம்பெயர்ந்து செல்லும் அன்னையரை நினைவில் கொள்ள...

திருவிழாக் கூட்டங்களில் குழந்தைகளைத் தொலைத்துவிட்டு, பரிதவிக்கும் அன்னையரை நினைவில் கொள்ள...

அநியாயமாகக் கொல்லப்படும் மகன்களை தங்கள் மடியிலேந்தி, மனம்நொறுங்கும் அன்னையரை நினைவில் கொள்ள...

மே 31ம் தேதி, தகுந்ததொரு தருணம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.