2017-05-24 16:38:00

இத்தாலிய ஆயர் பேரவையின் புதிய தலைவர் - கர்தினால் பஸ்ஸெத்தி


மே,24,2017. இத்தாலியின் பெரூஜியா (Perugia) பேராயரான, கர்தினால் குவால்தியேரோ பஸ்ஸெத்தி (Gualtiero Bassetti) அவர்களை, இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 24, இப்புதனன்று நியமித்தார்.

உலகின் ஏனைய நாடுகளில் இயங்கிவரும் ஆயர் பேரவைகளின் தலைவர்களை, அந்தந்த நாடுகளின் ஆயர்கள் தேர்ந்தெடுக்கும் வேளையில், இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவருக்கு தகுதியான மூவரை, இத்தாலிய ஆயர்கள் முன்மொழிய, அவர்களில் ஒருவரை திருத்தந்தை நியமிப்பது, இத்தாலியில் மட்டும் நிகழ்கிறது.

வயது முதிர்ந்தோரின் கனவுகள் காணும் வல்லமை மீது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை, தன்னை இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவராக அவர் நியமித்துள்ளதில் தெரிகிறது என்று, இப்பேரவையின் புதியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கர்தினால் பஸ்ஸெத்தி அவர்கள் கூறினார்.

இவ்வாண்டு ஏப்ரல் 1ம் தேதி, தான் 75 வயதை நிறைவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய கர்தினால் பஸ்ஸெத்தி அவர்கள், தனக்கு முன்னர் தலைவராகப் பணியாற்றிய கர்தினால் ஆஞ்செலோ பஞ்ஞாஸ்கோ அவர்களுக்கு சிறப்பாக நன்றி கூறினார்.

1942ம் ஆண்டு பிறந்த குவால்தியேரோ அவர்கள், 1996ம் ஆண்டு அருள்பணியாளராகவும், 1994ம் ஆண்டு ஆயராகவும் அருள்பொழிவு செய்யப்பட்டார்.

2014ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால், கர்தினாலாக உயர்த்தப்பட்ட பஸ்ஸெத்தி அவர்கள், ஆயர்கள் பேராயம், அருள்பணியாளர்கள் பேராயம் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவை ஆகிய மூன்று துறைகளில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.