2017-05-22 16:32:00

பொதுப் பேரவை நடைபெறும் நாள்கள் இயேசு பேசுவதைக் கேட்கும் காலம்


மே,22,2017. துறவு சபையில் பொதுப் பேரவை நடைபெறும் நாள்கள், காலத்தின் அடையாளங்கள் வழியாக, ஆண்டவர் பேசுவதை உற்றுக் கேட்கும் காலமாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று கூறினார்.

விண்ணகப் போதகரின் பக்தியுள்ள சீடர்கள் சகோதரிகள் சபையின் பொதுப்பேரவையில் கலந்துகொள்ளும் 53 பிரதிநிதிகளை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பொதுப் பேரவை, அச்சபையினரின் வாழ்வில், ஏராளமான நற்செய்தியின் கனிகளைக் கொணர வேண்டும் என்ற தன் வாழ்த்தைத் தெரிவித்தார்.

நற்செய்தியின் கனிகள் பற்றி விளக்கிய திருத்தந்தை, முதலில் ஒன்றிப்பின் கனிகள் அவசியம் என்றும், இந்த ஒன்றிப்பு, தூய ஆவியாருக்குத் திறந்த மனதுடன் செயல்படுவது, பவுலின் துறவுக் குழுமத்துடன் ஒன்றித்த வாழ்வு, ஏனையத் தனிவரங்களுடன் ஒன்றிப்பு, இக்கால மனிதருடன் ஒன்றிப்பு ஆகியவற்றில் வெளிப்பட வேண்டும் என்றும் கூறினார்.

காலத்தின் அடையாளங்கள் வழியாகப் பேசும் ஆண்டவருக்குச் செவிமடுத்தல், சபைச் சகோதரிகள், காலத்தின் மனிதர்கள் ஆகியோர் பேசுவதை உற்றுக்கேட்டல், தூய ஆவியாருக்கு விருப்பமானதைத் தேர்ந்து தெளிதல் போன்ற பொதுப்பேரவையின் பண்புகளையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

விண்ணகப் போதகரின் பக்தியுள்ள சீடர்கள் சகோதரிகள் வத்திக்கானில் ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றியும் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்சபையினர் ஆற்றிவரும் பணிகளையும் ஊக்குவித்தார்.

கடந்த ஏப்ரல் 10ம் தேதி ஆரம்பித்த இச்சபையின் பொதுப் பேரவை, இம்மாதம் 28ம் தேதி நிறைவடையும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.