2017-05-22 16:18:00

பாசமுள்ள பார்வையில்.. அன்புக்காக ஏங்கும் அன்னையர்


மீன்களை, பறவைகளை, விலங்குகளை.. இப்படி எல்லாவற்றையும் படைத்த கடவுளுக்கு, தம் படைப்பில் திருப்தி ஏற்படவில்லை. அதனால் மனிதனைப் படைத்தார் கடவுள். அதிலும் மனநிறைவு இல்லாமல், தமது சக்தி முழுவதையும் பயன்படுத்தி, குறையே இல்லாத, ஓர் உன்னதமான படைப்பை உருவாக்கினார். அப்படைப்புதான் பெண். அதாவது தாய். தம் படைப்பு வேலை முடிந்தபின் விண்ணகம் சென்ற கடவுள், தம் படைப்புக்களைப் பார்வையிடுவதற்காக, சிறிது காலம் கழித்து பூமிக்கு வந்தார். அப்போது, தமது உன்னதப் படைப்பாகிய பெண்ணைப் பார்த்தார். அம்மா, உனக்கு ஏதாவது குறை இருக்கிறதா? எனக் கேட்டார் கடவுள். அதற்கு அந்த அம்மா, சுவாமி, என் பிள்ளைகளுக்குச் சேவை செய்ய இரண்டு கைகள் போதவில்லை, அதனால் இன்னும் இரண்டு கைகளைக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றார். உடனே கடவுள் இதோ அதற்கான வரம் கொடுக்கிறேன் என்றார். அந்த அம்மாவுக்கு மேலும் இரண்டு கைகள் கிடைத்தன. நான்கு கைகளால் அந்த அம்மா பிள்ளைகளுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தார். அதைப் பார்த்து கடவுள் திருப்தியோடு திரும்பிச் சென்றார். சிறிது காலம் சென்று, மீண்டும் அந்த அம்மாவிடம் வந்து நலம் விசாரித்தார் கடவுள். அந்நேரத்தில் அந்த அம்மா, சுவாமி, ஓடி ஓடி வேலை செய்ய இரண்டு கால்கள் போதவில்லை என்றார். சரியம்மா, மேலும் இரண்டு கால்களைப் பெற்றுக்கொள் என கடவுள் வரமளித்துச் சென்றார். மீண்டும் சிறிது காலம் கழித்து, தன் தூதர் ஒருவருடன் பூமிக்கு வந்த கடவுள், அந்த அம்மாவைப் பார்த்தார். அப்போது அந்த அம்மா, ஒரு சுவரில் சாய்ந்து அழுதுகொண்டிருந்தார். அதைப் பார்த்த அந்தத் தூதர், கடவுளே, கைகளையும், கால்களையும் கொடுத்த நீங்கள், கண்ணீரை எதற்குக் கொடுத்தீர்கள் எனக் கேட்டார். அதற்கு கடவுள், கண்ணீரை நான் கொடுக்கவில்லை, அதைக் கொடுத்தது அந்த அம்மாவின் பிள்ளைகள் என்றார். இது ஒரு நாட்டின் நாடோடிக் கதை.

ஆம். பிள்ளைகளின் அன்பின்மையால் கண்ணீரில் காலம் தள்ளும் நிலையில் இன்று பல தாய்மார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.