2017-05-20 15:42:00

பாசமுள்ள பார்வையில் - தேடிவந்து பரிசளிக்கும் தாயான இறைவன்


ஓர் ஊரில், வாழ்ந்துவந்த ஒரு முக்கிய புள்ளி, எப்போதும் ஏதோ ஓர் அவசரத்தில் இருப்பதுபோல் எல்லாருக்கும் தெரியும். தொழுகைக் கூடத்திற்குச் சென்றாலும், அங்கும் நிலைகொள்ளாமல் தவிப்பார். தொழுகையின் இறுதிவரை தங்காமல், விரைந்து வெளியேறுவார். இவரைப் பார்த்துக்கொண்டிருந்த யூத குரு, ஒரு நாள் இவரிடம், "நான் உங்களைப் பார்க்கும்போதெல்லாம், நீங்கள், ஏதோ ஓர் அவசரத்தில் இருப்பதுபோலவே தோன்றுகிறீர்களே. ஏன் இந்த அவசரம்?" என்று கேட்டார். அந்த முக்கிய புள்ளி, குருவிடம், "நான் வாழ்வில் பலவற்றைச் சாதிக்க விரும்புகிறேன். வெற்றி, செல்வம், புகழ், இவற்றைத் தேடி, எப்போதும் நான் ஓடிக்கொண்டே இருப்பதால், இந்த அவசரம்" என்று கூறினார்.

"சரியான பதில் இது" என்று கூறிய குரு, மேலும் தொடர்ந்தார்: "வெற்றி, செல்வம், புகழ் எல்லாம் உங்களுக்கு முன் செல்வதாக நினைக்கிறீர்கள். கைநழுவிப் போய்விடுமோ என்ற பயத்துடன், நீங்கள் எப்போதும் இவற்றைத் துரத்திக் கொண்டிருக்கிறீர்கள்... சரி... கொஞ்சம் மாற்றி சிந்தித்துப் பாருங்களேன். நீங்கள் துரத்திச்செல்லும் பரிசுகள், உங்களுக்கு முன் செல்லாமல், உங்கள் பின்னே உங்களைத் தேடிக்கொண்டு வரலாம் இல்லையா? கடவுள், இந்தப் பரிசுகளையெல்லாம் ஏந்திவருவதாகவும் எண்ணிப் பார்க்கலாமே! அப்படி அவர், உங்கள் வீடு தேடி வரும்போது, நீங்கள் இப்பரிசுகளைத் துரத்திக்கொண்டு போயிருந்தால், கடவுள் வரும் நேரத்தில், நீங்கள் வீட்டில் இருக்க மாட்டீர்கள். கடவுள் உங்களைச் சந்திக்காமல், உங்களுக்கு இந்தப் பரிசுகளைத் தரமுடியாமல், திரும்ப வேண்டியிருக்குமே!" என்று, அந்த யூத குரு கூறினார்.

செல்வத்தையும் புகழையும் தேடி நாம் ஓடிக் கொண்டிருக்கும்போது, தாயான இறைவன், இவற்றையெல்லாம் நமக்குத் தருவதற்கு, நம்மைத் தேடி வரக்கூடும் என்பது, அழகான எண்ணம், மாற்றி சிந்திக்க வைக்கும் ஓர் எண்ணம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.