2017-05-19 15:20:00

பேரிடர் விழிப்புணர்வுக்கென பல்சமய குழுக்கள்


மே,19,2017. இந்தியாவில், பேரிடர் காலங்களில் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மக்களைத் தயாரிப்பதற்கென, பல்சமயக் குழுக்களை உருவாக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில், இந்திய காரித்தாஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த கூட்டத்தில்    கலந்துகொண்ட, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, சீக்கிய மற்றும், புத்தமதப் பிரதிநிதிகள் இணைந்து, பேரிடர் விழிப்புணர்வு குழுக்களை உருவாக்குவதற்குத் தீர்மானித்துள்ளனர்.

பேரிடர்கள் குறித்து, பொது மக்களில் விழிப்புணர்வை உருவாக்கவும், இவை குறித்த தாக்கங்களை நாடகப்பாணியில் எடுத்துரைக்கவும், இந்தப் பல்சமயக் குழுக்கள் முயற்சிகள் மேற்கொள்ளும் என, இந்திய காரித்தாஸ் நிறுவன இயக்குனர், அருள்பணி பால் மூன்ஜெலி அவர்கள் கூறினார்.

மேலும், இக்கூட்டத்தில் பேசிய, உலகளாவிய பல்சமய கூட்டமைப்பின் சுவாமி ஆதித்தியானந்தா சரஸ்வதி அவர்கள், மாற்றங்களைக் கொணர்பவர்கள் மட்டுமல்ல, மற்றவரையும் மாற்றத்திற்குத் தயார் செய்பவர்களும் இக்காலத்திற்கு அவசியம் என்று கூறினார்.

இந்திய ஆயர் பேரவையின் காரித்தாஸ் நிறுவனம் நடத்திய இக்கூட்டத்தில், கத்தோலிக்க நிவாரணப் பணி(CRS), திருஅவையின் துணை சமூகப்பணி(CASA), இஸ்லாமிய நிவாரண அமைப்பு உட்பட, சில பல்சமய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மேலும், இந்தியாவில், 2017ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், கிறிஸ்தவர்க்கெதிரான 260 நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன என, ஒரு கிறிஸ்தவ அமைப்பு கூறியுள்ளது. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.