2017-05-19 15:55:00

உலகத் தாராளமயமாக்கல் அனைவருக்கும் பயனுள்ளதாய் அமைய...


மே,19,2017. உலகளாவிய தாராளமயமாக்கல், பலர் கடும் ஏழ்மையிலிருந்து வெளிவர உதவியிருக்கின்றபோதிலும், இது, உலகில், அனைவரின் நலனுக்காகவும், ஒவ்வொரு மனிதரும் மாண்புடன் வாழவும் உதவ வேண்டும் என, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.

Centesimus Annus-Pro Pontifice என்ற அமைப்பு, சமுதாயமும் பொருளாதாரமும், என்ற தலைப்பில் உரோம் நகரில் நடத்தும் பன்னாட்டு கூட்டத்தில், இவ்வியாழனன்று உரையாற்றிய, கர்தினால் பரோலின் அவர்கள், இக்காலம் எதிர்நோக்கும் புலம்பெயர்ந்தவர் மற்றும், குடியேற்றதாரர் பிரச்சனைகள் பற்றியும் உரையாற்றினார்    

இத்தாலியில், இம்மாதத்தில் நடைபெறவிருக்கும் G7 என்ற, தொழில்வளர்ச்சியடைந்த நாடுகளின் தலைவர்கள் கூட்டம் பற்றியும் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் பரோலின் அவர்கள், இந்தக் கூட்டத்தை, உலகினர் அனைவரும் நம்பிக்கையோடு நோக்கியிருப்பதாகத் தெரிவித்தார்.  

இத்தலைவர்கள் எடுக்கவுள்ள தீர்மானங்கள், மனிதரின் அடிப்படை விழுமியங்களை மதிப்பதாய், இக்காலத்திய சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமையும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார் கர்தினால் பரோலின்.

Centesimus Annus - Pro Pontifice என்பது, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் எழுதிய, Centesimus Annus அதாவது, நூறாவது ஆண்டில் என்ற திருமடல் வெளியிடப்பட்டதற்குப் பின் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

இந்த அமைப்பின் "சமுதாயமும் பொருளாதாரமும்" என்ற, 2017ம் ஆண்டின் பன்னாட்டு விருது, இறையியல் சிந்தனையாளர் Markus Vogt (Prinzip Nachhaltigkeit. Ein Entwurf aus theologisch-ethischer Perspektive) பிரெஞ்ச் ஊடகவியலாளர் அருள்பணி Dominique Greiner, ஜெர்மன் வானொலியின்  Burkhard Schäfers  ஆகிய மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதையொட்டி நடைபெறும் இம்மூன்று நாள் கூட்டம், மே 20, இச்சனிக்கிழமையன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.