2017-05-18 14:30:00

'பரிவு புரட்சி' நோக்கி, தொழில் நுட்ப கண்டுபிடிப்புக்கள்...


மே,18,2017. நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில், புதிய தொழிநுட்பங்கள் எவ்விதம் துணை நிற்கமுடியும் என்பதை, ஐ.நா. அவை சிந்திப்பது, சிறந்த முயற்சி என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நியூ யார்க் நகரில், ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் பெர்னார்த்தித்தோ அவுசா அவர்கள், "நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகளை அடையும் செயல்கள், கண்டுபிடிப்புகள், தொடர்புகள்" என்ற தலைப்பில், இப்புதனன்று நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு உரையாற்றினார்.

அண்மையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய TED talk என்ற காணொளிச் செய்தியை, இணையத்தில் பின்பற்றியோரின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருந்தது என்றும், அதேபோல், திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகளைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கையும் மிக அதிக அளவில் உள்ளது என்பதையும் தன் உரையில் குறிப்பிட்டார், பேராயர் அவுசா.

தொடர்பு என்றதும், தொழிநுட்பக் கருவிகளுடன் கொள்ளும் தொடர்பை எண்ணிப் பார்க்காமல், மனிதர்கள் ஒருவர் ஒருவருடன் கொண்டிருக்கும் தொடர்பை எண்ணிப்பார்க்கவேண்டும் என்று தன் TED talkல் திருத்தந்தை கூறியுள்ளதை பேராயர் அவுசா அவர்கள் குறிப்பிட்டார்.

தொழில் நுட்ப கண்டுபிடிப்புக்கள், 'பரிவு புரட்சி' நோக்கி மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று திருத்தந்தை இதே உரையில் கேட்டுக்கொண்டதை, பேராயர் அவுசா அவர்கள் தன் பகிர்வில் நினைவுகூர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.